கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்து சொல்வதற்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. மூக்கு மற்றும் வாயில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் இதில் பரிசோதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கொரோனாவை உறுதி செய்ய இந்த பரிசோதனை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஒருவருக்கு கொரோனா உறுதியானதும் அவருக்கு என்ன வகையான கொரோனா என்று கண்டறிய வேண்டிய அவசியம் இருந்தால் எடுக்கப்பட்ட மாதிரி மரபணு பகுப்பாய்வு கூடத்தில் பரிசோதித்து பார்க்கப்படும். இந்தியாவில் 37 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மாநில பொது சுகாதார ஆய்வகம் இதற்கான அதிநவீன வசதிகள் கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் புனேவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு சென்று பிரத்யேக பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர். இந்த பகுப்பாய்வு கூடத்தில் ஒருவருக்கு வந்திருப்பது என்ன வகையான கொரோனா என துல்லியமாக கண்டறிய முடியும். ஆனால் இந்த முடிவுகளை தெரிந்து கொள்ள நான்கு நாட்கள் ஆகும். உருமாறிய கொரோனாவை துல்லியமாக கண்டறியும் பரிசோதனை என்றாலும் பெருந்தொற்று காலத்தில் நான்கு நாட்கள் காத்திருந்தால் நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே டாங்பாத் என்ற கிட் பயன்படுத்தி ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து உருமாறிய கொரோனா இருக்க வாய்ப்புள்ளதா இல்லையா என சில மணி நேரங்களிலேயே தெரிந்து கொள்ளலாம்.




சாதாரண ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யும் போது எப்படி மாதிரி எடுக்கப்படுகிறதோ அதே போல் தான் மாதிரி எடுக்கப்படும் நோயாளிக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. எடுக்கப்பட்ட மாதிரி ஆய்வகத்துக்கு வரும் போது சாதாரண ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யாமல் டாங்பாத் கிட் கொண்டு பரிசோதனை செய்யப்படும். இந்த கிட் பயன்படுத்தும் போது, கொரோனா வைரஸில் உள்ள என், ஈ,  மற்றும் எஸ் ஆகிய மூன்று ஜீன்கள் இருக்கிறதா என கண்டறியும். புதிய ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ்-ல் எஸ் ஜீன் காணப்படாது. எனவே பரிசோதிக்கப்படும் மாதிரியில் எஸ் ஜீன் தென்படவில்லை என்றால் அது ஒமைக்ரானாக இருக்கலாம் என முதல் கட்டமாக தெரிந்து கொள்ள முடியும். அதன் பிறகு மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி முடிவை உறுது செய்துக் கொள்ளலாம்.




சாதாரண ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் என் மற்றும் ஈ ஜீன் மட்டுமே கண்டறிய முடியும். எஸ் ஜீன் உள்ளதா என கண்டறிய முடியாது. இந்த டேக் பாத் கிட் தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி என சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நான்கு நகரங்களிலும் மேலும் உள்நாட்டு விமான நிலையங்கள் கொண்ட சேலம், தூக்குக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 அரசு ஆய்வகங்களில் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


கொரோனா பாசிடிவ் ஆன குழந்தைகள், தீவிர நுரையீரல் தொற்றுடன் வரும் இளைஞர்கள், இணை நோய்கள் இல்லாமல் தீவிர கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள், சர்வதேச பயணிகள் ஆகியோருக்கு இந்த டாங்பாத்  கிட் பயன்படுத்தப்படும். ஒமிக்ரான்  தொற்று கர்நாடக மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதற்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று, கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதன்படி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் சிகிச்சைக்காகத் தனிப் பிரிவு தொடங்கப்பட்டது. பழைய அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் முதல் கட்டமாக 20 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் தனியாக ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேறெந்த வார்டுகளுடனும் தொடர்பில்லாதவாறும், மற்றவர்களுக்குப் பரவாதவாறும் இப்பிரிவு தனியாக அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தவிர, வெளிநாடுகளிலிருந்து திரும்புபவர்களைத் தனிமைப்படுத்தவதற்காக இம்மருத்துவமனையில் தனித்தனியாக 20 அறைகள் கொண்ட தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட 5 வார்டுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தற்போது 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதற்கென தனிப் பிரிவும் இம்மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது 5 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.