மலைப்பிரதேசங்களில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளால் அவ்வப்போது அப்பகுதி மக்கள் அவதிப்படுவதை போல், கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் ஒட்டியுள்ள கிராமங்களில் அவ்வப்போது முதலை ஊருக்குள் புகுந்து மாடு, ஆடுகளை கடிப்பதோடு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. முதலை கடித்து ஒரு சிலர் உயிரிழந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம்  முக்கொம்பு காவிரியிலிருந்து பிரியும் கொள்ளிடம் ஆறு நாகை மாவட்டம் மகேந்திரபள்ளியில் சென்று வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆறு தான் தஞ்சை மாவட்டத்தையும் அரியலூர், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களையும் பிரிக்கும் எல்லைக்கோடாக உள்ளது.



கொள்ளிடம் ஆறு தஞ்சாவூர் மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் ஓடிவரும் போது அங்கு ஒரு மணற்திட்டு உருவானது. இந்த பகுதி அணைக்கரை என அழைக்கப்பட்டது. மேற்கு பகுதியில் கொள்ளிடம் இரண்டாக பிரிந்து இரண்டரை கி.மீட்டர் தூரம் சென்று மீண்டும் ஒன்றாக இணைந்து கொள்ளிடம் செல்கிறது. இந்த ஆற்றின் நடுவே உருவான “அணைக்கரை” தீவு போல் காணப்படுகிறது. இந்த ஆற்றிலிருந்து வடக்குப் பகுதியில் வடவாறு பிரிந்து வீராணம் ஏரிக்கு செல்கிறது. கடலூர் மாவட்ட பாசனத்துக்கு முழுமையாக வடவாறும், வீராணமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அணைக்கரையில் தண்ணீரை பகிர்ந்து விநியோகம் செய்ய கீழணையை பிரிட்டிஷ் பொறியாளர் சர்ஆர்தர் காட்டன் என்பவர் கட்டினார்.
  

 

இந்த பகுதியில் தண்ணீர் பகிர்ந்து வழங்குவதால் ஆண்டு முழுவதும் அணைக்கரையில் தண்ணீர் தேங்கியிருக்கும். இங்கு தேங்கியுள்ள தண்ணீரில் ஏராளமான முதலைகள் வசித்து வருகிறது. இந்த முதலைகள் அவ்வப்போது தண்ணீரிலிருந்து வெளியே வந்த மணற்பரப்பில் ஓய்வெடுப்பதும், அப்படியே ஊருக்குள் புகுந்து விடுவதுமாக உள்ளது. அப்போது பிடிபடும் முதலைகளை கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விடுவது வழக்கம். கும்பகோணம் பகுதியில் நவக்கிரக மற்றும் பரிகார கோயில்கள் ஏராளமாக உள்ளது. இந்த கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில்கள் நடை சாத்தப்படும் அந்த இடைப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் அணைக்கரைக்கு சென்று முதலைப்பண்ணைகளை பார்வையிட ஏதுவாக இருக்கும்.



இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: தீவு போல் காட்சியளிக்கும் அணைக்கரையில் எப்போதும் தண்ணீர் தேங்கியிருக்கும். அதே போல் அணைக்கரை முதல் மதனத்தூர் வரை கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் காடுகள் அதிகம் உள்ளது. இதனால் இங்கு ஏராளமான பறவைகள் வசித்து வருவதால் இந்த பகுதியை பறவைகள் சரணாலயமாகவும், அணைக்கரையை பொழுபோக்குடன் கூடிய சுற்றுலா தலமாகவும் அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைக்கரையில் ஏராளமான முதலைகள் வசித்து வருவதால் இங்கு முதலைப்பண்ணை அமைத்தால் அதனை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏதுவாக அமையும்.

 

மேலும் கும்பகோணம் வர்த்தக ரீதியாக பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. நாள்தோறும் ஏராளமானோர் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். கோயில்களுக்கும், சுற்றுலாவுக்கும் இப்பகுதிக்கு வரும்போது அவர்கள் பொழுபோக்க இடமில்லாமல் உள்ளது. தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பூங்காவை விட்டால் வேறு ஏதும் இடமில்லை. தமிழக சுற்றுலாத்துறையினர் அணைக்கரையில் முதலை பண்ணை அமைத்தால் அப்பகுதி சுற்றுலா தலமாக விளங்குவதோடு, முதலைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.