திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துவந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததன் அடிப்படையில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக  திருவாரூர் மாவட்டத்தில்  கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று ஒருவர் கூட உயிரிழக்கவில்லை, என்பது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் திருவாரூர் மாவட்டத்தில் 294 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, நன்னிலம்,  குடவாசல், மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று வரை 3278 நபர்கள் தற்போது வரை சிகிச்சையில் உள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 701 நபர்கள் பூரண குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

மேலும் மாவட்டம் முழுவதும் இதுவரை தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 255 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் ஒட்டுமொத்தமாக 1055 படுக்கை வசதிகள் இருந்து வந்த நிலையில் தற்போது மேலும் நான்கு படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு 1059 படுக்கை வசதிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 605 படுக்கைகளில் தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தனியார் மருத்துவமனையில் உள்ள 268 படுக்கைகளில் 156 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று கோவிட் கேர் மையமாக திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்,  உள்ளிட்ட  இடங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில் கோவிட் கேர் மையத்தில் ஒட்டுமொத்தமாக உள்ள 1105  படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 408 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 470 ஆக்சிஜன் படுக்கைகளில் 402 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் படுக்கை பிரிவில் 119 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



மேலும் தனியார் மருத்துவமனைகளில் 64 நபர்கள் ஆக்சிஜன் படுக்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் 34 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக  நாள்தோறும்  தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்த நிலையில், முழு ஊரடங்கு  அறிவித்த நாளிலிருந்து,  நாளுக்கு நாள் படிப்படியாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது,  என்பது  குறிப்பிடத்தக்கது.  மேலும்  கடந்த 5 நாட்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி இல்லாத காரணத்தினால்  யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.