பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டவர் குழந்தை பிறந்து இரண்டு நாளில் உயிரிழப்பு. உடலை வாங்க மறுத்து பெண்ணின் உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், மருத்துவமனையில் தொட்டதற்கெல்லாம் லஞ்சம் கேட்பதாகவும் பெண்ணின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

 

திருவாரூர் அரசு கல்லூரி மருத்துவமனையில் நடந்தது என்ன ?

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட சன்னாநல்லூர் அருகே காவாலி என்கிற கிராமத்தை சேர்ந்தவர் பழனி இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் ஆனந்தி என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்து 11 மாதங்கள் ஆகிறது இந்த நிலையில் ஆனந்தி தற்போது 10 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை ஆனந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்துள்ளனர்.அப்போது அந்த பெண்ணிற்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

 

அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை

 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆனந்திக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குழந்தை சிசு தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று ஆனந்திக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆனந்தி உயிர் இழப்புக்கு காரணம் தெரிவிக்க வேண்டி 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் ஆனந்தியின் உடலை வாங்க மறுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு கூடினர்.இதனையடுத்து தகவலறிந்து வந்த திருவாரூர் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை கலைத்தனர். மேலும் ஆனந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

ஆனந்தியின் உறவினர் சொல்வது என்ன ?

 

மேலும் இதுகுறித்து ஆனந்தியின் உறவினர் கூறுகையில் இன்று காலை வரையிலும் நல்லா இருந்தாங்க நல்லா பேசுனாங்க திடீர்னு ஆக்ஜிஜன் மாஸ்க் போட்டாங்க கொஞ்ச நேரத்தில் இறந்துட்டாங்க என்ன காரணம் னு சொல்லல பன்றிக்காய்ச்சல்னு சொன்னாங்க தனி வார்டுல கூட வைக்கல சரியான காரணம் இதுவரை சொல்லவில்லை ஆனந்தி இறப்பிற்கு காரணம் தெரிந்தால் தான் உடலை வாங்குவோம் என தெரிவித்துள்ளார்.ஆனந்தியின் சித்தப்பா இது குறித்து கூறுகையில் இங்கே தொட்டதுக்கெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் இதுவரை 5000 ரூபாய் செலவு செய்துள்ளோம் லஞ்சம் கொடுக்கக் கூடாது என பிளக்ஸ் போர்டு வைத்து விட்டு தொட்டதுக்கெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.