திருவாரூர் மாவட்டத்தில் மூன்று மணி நேரத்தில் 10 செண்டி மீட்டர் மழை பொழித்து அனைவரையும் வீடுகளுக்குள் முடங்க வைத்துள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகியிருப்பதால், இன்னும் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

மூன்று மணி நேரத்தில் இவ்வளவு மழையா ?

 

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இன்று தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ள்  நிலையிலும் மேலும்  இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 15,16 தேதிகளில் புதுவை வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலைகொள்ளும் என்பதாலும் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பாக இன்று விழுப்புரம் கடலூர் அரியலூர் பெரம்பலூர் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில் நேற்று இரவு முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. குறிப்பாக திருவாரூர் நகரத்திற்குட்பட்ட நாலுகால்மண்டபம் வாழ வாய்க்கால் சீனிவாசபுரம் வடக்கு வீதி உள்ளிட்ட இடங்களிலும் மேலும் சேந்தமங்கலம் விளமல் வண்டாம்பாலை நன்னிலம் குடவாசல் எட்டியலூர் திருநெல்லிக்காவல் உள்ளிட்ட இடங்களிலும் நள்ளிரவு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

 

10 செண்டி மீட்டர் மழை

 

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை திருவாரூர் மாவட்டத்தில் 10 செ.மீ  மழை அளவும் பதிவாயிருக்கிறது.குறிப்பாக திருவாரூரில் 3.செ.மீ மழை அளவும் நன்னிலம் குடவாசலில் 2 செ.மீ மழை அளவும் பதிவாகியுள்ளது. அதிகாலையில் மழை இல்லாத நிலையில் தற்போது  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.

 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

 

அதிக மழை பொழியும் நேரத்தில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும் முன்னேற்பாடான விஷயங்களை முன்கூட்டியே செய்துவைத்துக்கொள்ளும்படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிக மழை மற்றும் காற்று வீசும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படும் என்பதால் அதற்கு ஏற்றவாறு வீட்டில் ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் மழை தொடர்பான பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

 

மிக அதி கன மழை எச்சரிக்கை

 

இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதி கன மழை பெய்யும் என தமிழ்நாடு அரசின் பொதுத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் இந்த கன மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது