தஞ்சாவூர்: தஞ்சையில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டுப்போன ரூ.7 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து போலீசார் அறிவுரை வழங்கினர்.


தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், பெரிய கோவில் உள்பட மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் மற்றும் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.


மாவட்ட எஸ்.பி., உத்தரவு


இதையடுத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஆஷிஷ்ராவத் உத்தரவின்பேரில் நகர டி.எஸ்.பி. சோமசுந்தரம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலைவாணி அறிவுரைப்படி சப்- இன்ஸ்பெக்டர் தேசியன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சம்பந்தம், முதல் நிலை காவலர்கள் தேன்மொழி, அகிலா  மற்றும் போலீசார் காணாமல் மற்றும் திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.




திருட்டு போன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பிரத்யேக செயலி மூலம் செல்போனை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் தஞ்சை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.


இதையடுத்து அந்த கடைகளுக்கு சென்று செல்போன்களை போலீசார் மீட்டனர். சந்தேகப்படும்படி யாராவது செல்போனை விற்க வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் சில செல்போன்கள் தஞ்சை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள பகுதிகளை சேர்ந்த சிலர் பயன்படுத்தியதும் தெரியவந்தது.


பொதுமக்களிடம் இருந்து திருட்டுப்போன செல்போன்கள் மீட்பு


அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர். சில செல்போன்களை கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர்.


இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்ற ரூ.7 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இதையடுத்து அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கலைவாணி முன்னிலையில் டவுன் டிஎஸ்பி சோமசுந்தரம் சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: 


டவுன் டி.எஸ்.பி., வழங்கிய அறிவுரை


மிகவும் கஷ்டப்பட்டு, உழைத்த பணத்தை சேமித்து செல்போன்கள் வாங்குகிறீர்கள். அதனை சரியான முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த செல்போன்களை வாங்கிவிட்டு பின்னர் அதை திருட்டு கொடுத்து தவிக்கக்கூடாது. மேலும் பெண்கள் பலர் சாலைகளில் நடந்து கொண்டே செல்போன் பேசியடி செல்கின்றனர். இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முக்கியமான விஷயமாக இருந்தால் சாலையோரத்தில் நின்று பேசிவிட்டு பின்னர் செல்போனை அனைத்து கைப்பையில் வைத்து கொள்ள வேண்டும்.


தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் வழக்கத்தை விட  கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே செல்போன் மட்டுமின்றி தங்களது உடைமைகளையும் கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும். கூட்டமான பேருந்துகளில் அடித்து பிடித்துக் கொண்டு ஏறுவதையும் தவிர்க்க வேண்டும். அதேபோல் ஆண்கள் பைக்குகளில் செல்போன்களில் பேசிக் கொண்டே செல்லக்கூடாது. பேண்ட் பாக்கெட்டுகளில் செல்போன்களை வைத்து செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். இதேபோல் பொதுமக்கள் விலை குறைவாக கிடைக்கிறது என்று அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து செல்போன்களை விலைக்கு வாங்கக் கூடாது. அது திருட்டு மொபைல்களாக கூட இருக்கலாம். எனவே விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் செல்போன்களை துரிதமாக கண்டுபிடித்த போலீசாருக்கு பரிசுகளையும் வழங்கினார்.