தஞ்சாவூர் அருகே  வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் கடந்த 26ம் தேதி பெண் ஒருவர் அணிந்திருந்த, 7 சவரன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிய திருவையாறைச் சேர்ந்த ரமேஷ் (57) என்பவரை பொதுமக்கள் வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.


தப்பியோடிய கைது மீண்டும் கைது

இதில், காயமடைந்த ரமேஷ், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 1ம் தேதி இரவு, அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். மருத்துவக்கல்லுாரி போலீசார் அவரை தேடி வந்தனர். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.,  ரவளிப்ரியா உத்தரவின் பேரில், தனிப்படை போலீசாரும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ரமேஷ், பள்ளியக்ரகாரம் பகுதியில் நின்றுக்கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் அங்கு சென்று ரமேஷை கைது செய்தனர்.

உறவினர்கள் மீது மூதாட்டி போலீசில் புகார்

தான் ஊருக்கு சென்றிருந்த நேரத்தில் தனது உறவினர் அவரது மகனுடன் வந்து என் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துச் சென்று விட்டனர் என்று போலீசில் மூதாட்டி புகார் செய்துள்ளார்.

தஞ்சை அருகே மாதாக்கோட்டை, கவிதா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி. இவரது மனைவி அமலா (69). இவர் தஞ்சை தமிழ்ப்பலைக்கழக போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

என்னுடைய கணவர் ஆரோக்கியசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நான் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி நான் எனது அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தேன். சில நாட்கள் கழித்து 24ம் தேதி வீட்டுக்கு திரும்பி வந்தேன். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி ஏற்பட்டது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் பணம் ஆகியவற்றை காணவில்லை.

பின்னர் தான் என்னுடைய உறவினர் ஒருவர் தனது மகனுடன் வந்து, நான் வீட்டில் இல்லாத போது நகைகள், பணம், வீட்டு பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது பொருட்கள் மற்றும் நகை, பணத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

புகார் குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் விசாரித்து அமலாவின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.