தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம் திருமங்கலக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் 288 பயனாளிகளுக்கு ரூ.1,20,14,140 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


திருமங்கலக்குடியில் மக்கள் நேர்காணல் முகாம்


தஞ்சாவூர் மாவட்டம். திருவிடைமருதூர் ஒன்றியம் திருமங்கலக்குடி கிராமத்தில் "மக்கள் நேர்காணல் முகாம்" தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 288 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 20 இலட்சத்து 14 ஆயிரத்து 140 மதிப்பீட்டில் வருவாய்த் துறை, சமூக பாதுகாப்பு திட்டம், வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை, சுகாதாரத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை போன்ற பல்வேறுத் துறைகள் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.




பின்பு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தெரிவித்ததாவது: பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை சரகம், திருமங்கலக்குடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.


288 பயனாளிகளுக்கு ரூ.1,20,14,140 மதிப்பில் நலத்திட்ட உதவி


வருவாய்த் துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.9,00,000 மதிப்பீட்டிலும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.7,04,000 மதிப்பீட்டிலும், வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.11,90687 மதிப்பீட்டிலும், சுகாதாரத் துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.22,000 மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 6 பயனாளிக்கு ரூ.33,900 மதிப்பீட்டிலும், வேளாண் மற்றும் உழவர் நலத் துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.5,483 மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு துறையின்சார்பில் 100 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையும், ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.20,070 மதிப்பீட்டிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.22,18,000 மதிப்பீட்டிலும், மகளிர் திட்டம் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.69,20,000 மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய கடனுதவி தொகைக்கான ஆணையினையும் என மொத்தம் 288 பயனாளிகளுக்கு ரூ.1,20,14,140 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


முதல்வரின் பல்வேறு நலத்திட்டங்களின் செயல்பாடு


தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் நலனை மனதில் கொண்டு மக்களுடன் முதல்வர், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை உறுதி செய், மக்களைத் தேடி மருத்துவம், மக்கள் நேர்காணல் முகாம், உங்களைத்தேடி உங்கள் ஊரில் போன்ற பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி


முன்னதாக மக்கள் நேர்காணல் முகாமில் அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்  பார்வையிட்டார்.


இதில் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு , ஒன்றிய துணை பெருந்தலைவர் பத்மாவதி கிருஷ்ணராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயபால், வட்டாட்சியர் பாக்யராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி, மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர் ராஜா, திருமங்கலக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பத்மினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.