தஞ்சாவூர்: பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள்  பல்வேறு தடை கற்களை தாண்டி போரிட்டு தங்களை நிரூபித்து வருகின்றனர். இதனால் அவர்களும் போர் வீரர்களுக்கு சமம்தான் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.



தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கில் மூன்று நாட்கள் நடக்கும் அகில இந்திய பாரா வாலிபால் போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாரா ஒலிம்பிக் என்பது போர் களத்தில் காயமடையும் வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது. 1956ம் பாரா ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டது. 1958-ம் ஆண்டு உலகளவில் இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது 75 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் அனைவரும், சமூகத்தில் பல்வேறு தடை கற்களை தாண்டி போரிட்டு தங்களை நிரூபித்துக்கொண்டு இருப்பதால்,  அவர்களும் போர் வீரர்களுக்கு சமம்தான்.





ஒலிம்பிக் போட்டிகளுக்கு உள்ள விதிமுறைகளில் சில விதிமுறைகளில் மட்டுமே மாற்றம் இருக்கும். உலகளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டகளில் நம் நாட்டை சேர்ந்தவர்களும், தமிழகத்தில் இருந்தும் அதிக பேர் கலந்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது. மாற்று திறனாளிகளை நம்முடன் சேர்த்துக்கொண்டு பயணிக்க வேண்டும். அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போட்டிகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கும் வகையில், அந்தந்த கலெக்டர்கள், மாவட்ட முதன்மை கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பல்வேறு வழிகளில் வழங்கி வருகின்றனர். மாணவர்கள் பொதுத்தேர்வுகளை தன்னம்பிக்கையுடன், பயமில்லாமல் எழுத வேண்டும்.

அந்தந்த பள்ளிகளில் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும். வழக்கமாக அறுவடை நேரங்களில் மழை பெய்வது என்பது அரிது. இருப்பினும், இம்முறை அதிகளவில் மழை பெய்துள்ளது. பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கு எடுப்பு பணிகளை அதிகாரிகள் துவங்கியுள்ளனர். அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டி நடைபெறும் களத்திற்குள் சென்று மாற்றுத்திறனாளி போட்டியாளர்களுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடன் தரையில் அமர்ந்தவாறு பாரா வாலிபால் போட்டியை துவக்கி வைத்து விளையாடினார். அவருடன் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும் தரையில் அமர்ந்தார்.