மயிலாடுதுறை ரயில்வே நிலையம் தெற்கு ரயில்வேயில் சென்னை வழியே திருச்சி செல்லும் மெயின் லைனில் முக்கியமான ஜங்ஷன் ஆகும். இந்நிலையில் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் ரயில்வே கேட்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள், ரயில்வே இருப்பு பாதை பாதுகாப்புகள் மென்மையாகமாக்கப்பட்ட பின்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் குறித்து ரயில்வே தலைமை பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையர் சைலேஷ் குமார் பதக் ஆய்வு மேற்கொண்டார். 




இவர் தெற்கு மற்றும் தென்மேற்கு ரயில்வேக்களின் பாதுகாப்பு ஆணையாக பொறுப்பு வகித்து வருகிறார். சிறப்பு ஆய்வு ரயில் மூலம் மயிலாடுதுறை வந்த அவருக்கு மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் திருச்சி கோட்டம் ரயில்வே மேலாளர் மனிஷ் அகர்வால் மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சிக்னல் அறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு ஆணையர், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.




மயிலாடுதுறையில்  விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் நகராட்சியில் பல்வேறு வீதிகளில் வழிந்தோடி வரும் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.


மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.  திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, கட்டுமான பொருட்களின் விளைவு உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 




தொடர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் திமுக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். மேலும் மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பல ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் வீதிகளில் வழிந்தோடியபோது அதிமுக ஆட்சியில் உடனுக்குடன் சரி செய்து சுகாதார நடவடிக்கைகள் மேற் கொண்டதாகவும், ஆனால் தற்போது திமுக வசம் உள்ள நகராட்சியில் பல்வேறு வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.




விடுதலை ராஜேந்திரனின் நூல்களை அரசுடைமையாக்கிய தமிழக அரசுக்கு திராவிடர் விடுதலை கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.


தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நே தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளரும் மயிலாடுதுறை மண்ணின் மைந்தருமான விடுதலை இராசேந்திரன் நூல்களை நாட்டுடைமையாக்கி அதற்குரிய உரிமைத்தொகையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.




இதற்கு வரவேற்பு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் அக்கழகத்தினர் மயிலாடுதுறை கேணிக்கரையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.