தஞ்சாவூர்: தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய TNTET Paper-I தேர்வு 10 தேர்வு மையங்களிலும், TNTET Paper-II தேர்வு 35 தேர்வு மையங்களிலும் நடைபெறவுள்ளது. இத்தேர்வு மையங்களில் TNTET Paper-I தேர்வுக்கு 3278 தேர்வர்களும், TNTET Paper-II தேர்வுக்கு 12972 தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) 2025 தேர்வுகள் நாளை 15.11.2025 மற்றும் நாளை மறுநாள் 16.11.2025 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கு தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய TNTET Paper-I தேர்வு 10 தேர்வு மையங்களிலும், TNTET Paper-II தேர்வு 35 தேர்வு மையங்களிலும் நடைபெறவுள்ளது. இத்தேர்வு மையங்களில் TNTET Paper-I தேர்வுக்கு 3278 தேர்வர்களும், TNTET Paper-II தேர்வுக்கு 12972 தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர்.
தேர்விற்கான மந்தனக்கட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து பெறப்பட்டு, வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் தேர்வு மையம் வாரியாக (இரட்டைபூட்டுமுறையில்- Double Locker System ) ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு தேர்வு நடைபெறும் நாளில் வழித்தட அலுவலர்கள் மூலமாக சம்மந்தப்பட்ட மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் உரிய நேரத்தில் அனுப்பி வைத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தேர்வுகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறும் பொருட்டு மாவட்டதேர்வு கண்காணிப்புக்குழு ஆயத்தக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்வுக்குழுத் தலைவர் தலைமையில் கடந்த 10.11.2025 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்ட மாவட்டத் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள துறைவாரியான தேர்வுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தேர்வினை எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் சிறப்பாக நடத்துவது குறித்தும், தேர்விற்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு அளிப்பது, தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது மற்றும் தேர்வு நடைபெறும் நாளில் தடையில்லா போக்குவரத்து வசதி வழங்குதல் சார்பாகவும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடங்கப்பட்ட நிலையில், நுழைவுச்சீட்டு சார்ந்தோ, பிறகுறைகள் சார்ந்தோ, விண்ணப்பதாரர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணான 1800 425 6753 இல் தொடர்பு கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், இத்தேர்வு தொடர்பான விளக்கங்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) சஞ்சாய் (8675197566) என்பவர் தாள் II-க்கும், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இ.அருள்மொழிராஜகுமாரி (9443806756) என்பவர் தாள் I-க்கும் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.