தஞ்சாவூர்: த.வெ.க தலைவர் விஜய்க்கு வேண்டுமானால் திமுக நல்லவர்களாக இல்லாமல் தெரியலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு திமுகவும், முதலமைச்சரும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.

Continues below advertisement

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.119.22 கோடி மதிப்பீட்டில் மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 174 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

இதேபோல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் ரூ.320 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே.என்.நேரு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல் அந்தநல்லூர் ஒன்றியம் திருச்செந்துறை, முக்கொம்பு ஆகிய இடங்களில் 7 பணிகளை திறந்து வைத்து, காவிரி கொள்ளிடத்தில் 4 லட்சம் மீன் குஞ்சுகளை விடுப்பு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

தொடர்ந்து மண்ணச்சநல்லூர் ஒன்றியம் திருப்பைஞ்சீலி, லால்குடி, புள்ளம்பாடி ரெட்டி மாங்குடி, முசிறி தண்டலைபுத்தூர்,தொட்டியம், உப்பிலியபுரம், துறையூர் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 13 இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் ரூ. .406.63 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பங்கேற்று மீன்குஞ்சுகளை விட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியின் குறுக்கே புதிய பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த அங்கு குடியிருக்கும் மக்களுக்கு ஸ்ரீரங்கம் பகுதியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பிற்கு பி.எல்.ஏ.2 செல்லலாம் என தேர்தல் ஆணையமே அனுமதி கொடுத்துள்ளது. அதில் என்ன தவறு உள்ளது. மற்ற கட்சிகளின் பி.எல்.ஏ 2 வருவதை யாரும் தடுப்பதில்லை. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்கு சாவடிகளுக்கும் பி.எல்.ஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

படிவத்தை நிரப்பி தர திமுகவினர் உதவுவதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவினர் உதவி செய்ய செல்லவில்லை என்றால் திமுகவினரும் செல்ல கூடாது என கூறினால் எப்படி?. நாளை ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் இதை கவனிக்கவில்லை என எங்கள் மீது தான் குற்றம் சாட்டுவார்கள். நாங்கள் சரியாக தான் இதை செய்து வருகிறோம்.

மத்திய அரசு ஜல்ஜீவன், நூறு நாள் வேலை திட்டம், மெட்ரோ, ஜி.எஸ்.டி என எதற்கும் நிதி ஒதுக்குவதில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் 12 திட்டங்கள் நிதி ஒதுக்காததால் செயல்படுத்த முடியாமல் உள்ளது. த.வெ.க தலைவர் விஜய்க்கு வேண்டுமானால் திமுக நல்லவர்களாக இல்லாமல் தெரியலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு திமுகவும், முதலமைச்சரும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள். பல நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்காக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

திமுக நல்லவர் போல் வேஷம் போடவில்லை, உண்மையாக நல்லவர்களாக இருப்பதால்தான் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வோம் என கூறும் அதிமுகவினர் மீதமுள்ள தொகுதிகளை ஏன் விட்டுவிட்டார்கள். திருப்பதியில் ஒரு நாள் முழுவதும் அன்னதானம் கொடுத்தது தப்பு இல்லை. எங்களை விமர்சனம் செய்தால் செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.