நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் அடுத்துள்ள பெருநாட்டாந்தோப்பு பகுதியை சேர்ந்த தேவேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த முனுசாமிக்கும் சில மாதங்களுக்கு முன்பு வேலி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் முனுசாமி மற்றும் அவரது மகன்கள் நடவடிக்கை எடுக்க கோரி தேவேந்திரன் புகார் அளித்து இருந்தார். இந்த நிலையில் இரு தரப்பிற்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலில் தேவேந்திரன் மகள் பிரியதர்ஷி தாக்கப்பட்டு நாகை அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 



 

இதனிடையே வேலி தகராறில் பெருநாட்டாந்தோப்பு பகுதியை சேர்ந்த முனுசாமி உள்ளிட்ட மூவர் மீது திருக்கண்ணபுரம் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட தேவேந்திரன் இன்று தனது மகள் மற்றும் மனைவியுடன் மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் கூலி தொழிலாளி தேவேந்திரன் தனது மனைவி மற்றும் மகளின் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தீக்குளிக்க முயன்ற நபரை தடுத்து நிறுத்தி அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 



 

 

தகராறில் திருக்கண்ணபுரம்  சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்து மேலும் தலைமறைவாக உள்ள முனுசாமி, உதயக்குமார் ஆகிய இருவரையும் தேடி வரும் நிலையில் திருக்கண்ணபுரம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அதன் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தேவேந்திரனின் மகள் தீக்குளிக்க முயன்ற போராட்டத்தின் போது மயக்கம் அடைந்தார். அவரை 108 வாகன மூலம் உடனடியாக மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.