நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள குரவப்புலம் தம்பதியினர் லெனின் - அணுசியா. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர். நாகை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் சாலை தர ஆய்வு அதிகாரி சிவாஜி ராஜா என்கிற சிவாஜி அங்குள்ள கோவிலின் பின்புறம் 12 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சி அடைந்த அவர்கள் வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 9 ஆம் தேதி புகார் அளித்தனர்.

 



 

புகாரை பெற்ற வேதாரண்யம் போலீசார் நாகை நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் சிவாஜி ராஜா என்கிற சிவாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 1 மாதங்கள் ஆகியும் போலிசார் இதுநாள்வரை கைது செய்யவில்லை. இதனிடையே சிவாஜி-க்கு நெருங்கிய உறவினர்கள் வழக்கை வாபஸ் வாங்க சொல்லி பாதிக்கப்பட்ட லெனின் அனுஷியா குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இன்று நாகை மாவட்ட ஆட்சியரிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்று கூறி சிவாஜிராஜாவின் புகைப்படத்துடன் அலுவலகத்துக்கு புகார் அளித்தார்.

 



 

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சிறுமியை புகைப்படம் எடுத்துவைத்து கொண்டு மிரட்டுவதாகவும், அரசு அதிகாரி என்பதால் போலிசார் கைது செய்ய தயங்குவதாகவும், குற்றம்சாட்டியுள்ள சிறுமியின் பெற்றோர், உடனடியாக அவரை கைது செய்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் கொலை மிரட்டல் காரணமாக சிறுமிகளின் பள்ளி படிப்பு பாதிக்கப்பட்டு இருப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

 

போக்சோ வழக்கில் சிக்கியுள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சிவாஜி  என்பவர் மீது பெண்களை தாக்கியது அரசு அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டது உள்ளிட்ட 4 வழக்குகள் வேதாரணியம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  வேதாரண்யம் அருகே 12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்