நாகை அருகே சடலத்தை எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால் 15 ஆண்டுகளாக 5 அடி உயர ரயில்வே தண்டவாளத்தை கடந்து 2 கிலோ மீட்டர் தூக்கிச் செல்லும் அவலம். 



 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குப்பொய்கைநல்லூர் ஊராட்சி வீரன்குடிகாட்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  இறந்தவர்கள் சடலத்தை எடுத்துச் செல்லும்போது நாகப்பட்டினம் வேளாங்கண்ணி இடையே செல்லும் ரயில்வே  தண்டவாளத்தை கடந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த உலகநாதன் மகன் கரிகாலச்சோழன் உடலை வாகனத்தில் எடுத்துச் சென்று 5 அடி உயர ரயில்வே தண்டவாளத்தில் இருந்து   சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர்.



 

மேலும் மழைக் காலங்களில்  சடலத்தை தூக்கிச் செல்லும்போது சடலத்துடன் வழுக்கி கீழே விழும் சூழ்நிலை நிலவுகிறது. மேலும் சாலை வசதியோ மின்விளக்கு வசதி இல்லாமல் ஜெனரேட்டரை தூக்கிச் சென்று அடக்கம் செய்யும் சூழ்நிலை உள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திற்கு  மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என வீரன் குடிகாடு பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.