இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3ஆம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.




நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில்  உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த 2ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் துவங்கியது தவகாலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும் அதன்படி இன்று  2 வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி  நடைபெற்றது.




பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை அதிபர் இருதயராஜ் தலைமையில்  சிலுவை பாதை ஊர்வலம் சென்றது. இதில்  ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில்  ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர்.




இதில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்த  பக்தர்கள் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள், உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக சிலுவைப் பாதையில் வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.