வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். ஒரே நாளில் மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேளாங்கண்ணிக்கு விடுமுறை தினத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜகம்பீரம் என்ற ஊரில் இருந்து உறவினர்கள் 15 பேர் சுற்றுலா வந்துள்ளனர். வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சொந்தமான விடுதியில் தங்கிய அவர்கள் கடலில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆரோக்கிய ஷெரின் ( வயது19), ரியானா (வயது 13), சஹானா ( வயது 14)  ஆகிய மூவரும்  கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் மூன்று பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மூவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இறந்த மூவரின் பிரேதமும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று பேர் கடல் அலைகள் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலில் குளிக்க வேண்டாம் என்று காவல்துறையில் பலமுறை அறிவுறுத்தி வருகிறது. ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கடலை பார்த்த ஆனந்தத்தில் தண்ணீரில் இறங்கி விளையாடுகின்றனர். அப்போது, பெரிய அலையில் சிக்கி தங்களின் உயிரை இழந்து உறவினர்களை மிகுந்த வருத்தத்திற்கு ஆளாக்கிவிடுகின்றனர்.