தஞ்சாவூர்: எந்த நோய் பாதிப்பு வந்தாலும் அதை தடுக்கின்ற ஆற்றல் தமிழக சுகாதார துறைக்கு உள்ளது என்று
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


சர்வதேச பொது சுகாதார மாநாடு


தஞ்சாவூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் நேற்று மாலை நடைபெற்ற மூன்றாவது சர்வதேச பொது சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:


உலக அளவிலான வெற்றியோடு சென்னையில் முதல் சர்வதேச மருத்துவ மாநாடு நடத்தப்பட்டது. தற்போது எதிர்கால மருத்துவம் குறித்து இந்திய அளவில் ஒரு சர்வதேச மாநாடு நடத்தப்படுவது என்பது தமிழத்தில் மட்டும் தான்.  பெருகி வரும் நோய்கள், உலகை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் நோய் என இவற்றுக்கு எல்லாம் எதிர்காலத்தில் நாம் எப்படி பட்ட தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆலோசனை செய்தவற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுப்பது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 




36 திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது


பொதுசுகாதாரத்துறையில், 36 திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 15க்கும் மேற்பட்ட  திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் 2021ம் ஆண்டிலும், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் 2021 ம் ஆண்டிலும், இதயம் காப்போம் என்ற திட்டம் 2023 ம் ஆண்டிலும் துவங்கப்பட்டது. சிறுநீரக பாதுகாப்போம், மக்களை தேடி ஆய்வகம், தொழிலாளர்களை தேடி மருத்துவம், நடப்போம்- நலம் பெறும் என பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 


தடுக்கும் ஆற்றல் தமிழக சுகாதாரத்துறைக்கு இருக்கு


எந்த நோய் பாதிப்பு வந்தாலும் அதை தடுக்கின்ற ஆற்றல் தமிழக சுகாதார துறைக்கு உள்ளது என்பதை மக்களுக்கு உணர்ந்தும் வகையிலும், மக்கள் அச்சமின்றி வாழவும் சுகாதார துறை தாங்கி பிடிக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு விதைப்பதற்கான இது போன்ற மாநாடுகளும், ஆய்வு கட்டுரைகளும் பெரியளவில் உறுதுணையாக இருக்கும்.


மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 72 என உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 55 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் 55-லிருந்து 46 ஆகக் குறைந்துள்ளது. நிகழாண்டுதான் ஒரே ஆண்டில் 9 ஆகக் குறைந்திருக்கிறது. இது, இந்திய அளவில் மகத்தான சாதனையாக உள்ளது.


மகப்பேறு இறப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முன்னேறுகிறது


தமிழ்நாட்டில் முழுமையாக மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டங்களாக விழுப்புரமும், விருதுநகரும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முன்னேறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 5 சுக பிரசவம் நடைபெற்றுள்ளது. தமிழக பொது சுகாதாரத் துறை மிகச் சிறப்பாக இருப்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.


மயிலாடுதுறையில் ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தியது தொடர்பாக விடியோ காட்சி மூலம் கண்டறிந்து, தொடர்புடைய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சுகாதார ஆய்வாளர்களாக 1,066 பேர், கிராம சுகாதார செவிலியர்களாக 2 ஆயிரத்து 253 பேர், மருத்துவர்களாக 2 ஆயிரத்து 550 பேர் பணி நியமனம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.பி. சார்பில் மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 1,066 பணியிடங்கள் உள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


வழக்குகளால் பணியிடங்கள் நிரப்புவதில் தாமதம்


கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கும் 30க்கும் அதிகமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. வழக்கு தொடுப்பதன் மூலம் பணியிடங்கள் நிரப்புவதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, வழக்கு தொடுப்பவர்கள் எங்களிடத்தில் வந்தால், பேசி சுமூகத் தீர்வு காணப்படும். சென்னை எழும்பூரில் உள்ளது போன்று குழந்தைகளுக்கான மருத்துவமனை சென்னையில் மற்றொன்றும், தஞ்சாவூரில் ஒன்றும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


விழாவில் மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம், எம்.பி., ச. முரசொலி, எம்எல்ஏக்கள் திருவையாறு துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர்கள் தஞ்சாவூர் சண். ராமநாதன், கும்பகோணம் க. சரவணன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் தி.சி. செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநர் ப. சம்பத், தஞ்சை துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


முன்னதாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேல வஸ்தா சாவடி ரவுன்டானா வரை பேரணி நடைபெற்றது. இந்த மாநாடு  3 நாள்களுக்கு நடைபெறுகிறது.