தஞ்சாவூர்: வெள்ளக் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்திட ஏதுவாக 300 ஆப்தமித்ரா திட்ட தன்னார்வலர்கள், 4550 முதல்நிலை மீட்பாளர்கள், 409 நீச்சல் வீரர்கள், 38 பாம்பு பிடிப்பவர்கள், 160 மரம் வெட்டுபவர்கள். 147 கால்நடை பாதுகாப்பு முதல்நிலை பணியாளர்கள் ஆகியோர்கள் தயார்நிலையில் உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024 வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார். இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் வட்ட அலுவலகங்கள் ஆகியவற்றில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு 66 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது.  பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் எனக் கண்டறியப்பட்ட பகுதிகளான வடவாற்றங்கரை மற்றும் கூடலூர் வெண்ணாற்றங்கரையில் கடந்த 13ம் தேதி அன்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளான 195 பகுதிகளையும் பலப்படுத்திட தொடர்புடைய அனைத்துத் துறையினருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


வெள்ளக் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்திட ஏதுவாக 300 ஆப்தமித்ரா திட்ட தன்னார்வலர்கள், 4550 முதல்நிலை மீட்பாளர்கள், 409 நீச்சல் வீரர்கள், 38 பாம்பு பிடிப்பவர்கள், 160 மரம் வெட்டுபவர்கள். 147 கால்நடை பாதுகாப்பு முதல்நிலை பணியாளர்கள் ஆகியோர்கள் தயார்நிலையில் உள்ளனர். வெள்ளக் காலங்களில் பயன்படுத்திட ஏதுவாக தேவையான அளவில் மருந்துப் பொருட்கள், ஆம்புலன்சுகள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள், பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக 251 நிவாரண முகாம்கள் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.


பேரிடர் காலங்களில் TNSMART Portal- பதிவேற்றம் செய்துள்ளவாறு கனரக இயந்திரங்கள், தேவையான அளவில் மணல் மூட்டைகள், தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள், தடுப்பு கம்புகள் , தீயணைப்பு துறை சார்பில் படகுகள், inflatable rubber boats, life buoys, life jackets and rubber dinghies போன்ற உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளது குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் எளிதாக வெளியேறிட பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் (Bridges and Culverts), மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்திடவும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொடர்புடைய துறையினர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.




தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுக் கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள். மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், தங்கும் விடுதிகள், பேருந்து நிலையங்கள், அலுவலகக் கட்டடங்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டிகள், பாலங்கள் மற்றும் மதகுகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளில் சேதமடைந்த மற்றும் பழுதடைந்த கட்டமைப்புகளை அடையாளம் கண்டறிந்து உடனடியாக அவற்றை பழுது நீக்கம் செய்திடவும், தேவையான நேர்வில் அப்புறப்படுத்திடவும் தொடர்புடைய துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


தேவையான அளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் சேமித்து வைத்திடவும், வடகிழக்கு பருவமழையின் போது சேதமடையும் மின்கம்பங்களை அப்புறப்படுத்திடவும், புதிய மின்கம்பங்களை நட்டு மின்சாரம் தடையின்றி விநியோகம் செய்திட தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும், சாலையில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்திடவும் தொடர்புடைய துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அனைத்துத் துறை அலுவலகங்களிலும் மொட்டை மாடியிலுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிடவும் அறிவுரை வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


முன்னதாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீயணைப்புத் துறையினரால் வடகிழக்கு பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான செயல் விளக்கப் பயிற்சி (Mock Drill அனைத்துத் துறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்டது. இதற்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, மாடிகளில் மயங்கி விழுந்தவர்களை எவ்வாறு கீழே கொண்டு வருவது உட்பட பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து காட்டினர். இதை கல்லூரி மாணக்கர்களுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பார்வையிட்டார்.


இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), அசோக்குமார் (பேராவூரணி), மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர்கள் மரு.அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சிக் துணைத் தலைவர் முத்துசெல்வம், வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர்), ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை), மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.