கடந்த 3 தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் கோரத்தாண்டவம், நேற்று காலை முதல், வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்து வருகிறது. இதில், அண்மைக்கால வரலாறு காணாத அளவில் சீர்காழியில் மட்டும், 24 மணி நேரத்தில் 44 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில், வங்கக்கடலில் சில தினங்களுக்கு முன் உருவான முதல் குறைந்த காற்றழுத்த நிலையானது வலுப்பெற்று, பகுதியாக மாறி, பிறகு தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, தற்போது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்ட ஆகிய மாவட்டங்களில் பெருமழையாக பெய்துக் கொண்டிருந்த இந்த காற்றழுத்தம், நேற்று முன்தினம் வலுவடைந்து சற்று நகர்ந்து, கடலூர், டெல்டா மாவட்டங்களை நேற்று காலைமுதல் மையம் கொண்டிருந்தது. 




இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வந்தது. இதிலும், மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், தற்போது மழை மாவட்டம் என்றழைக்கலாம் என்றளவில் மழை பெய்து தீர்த்தது. மயிலாடுதுறையின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மிக கனமழை பெய்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 12 மணியளவில் மழையானது நின்றது. செம்பனார்கோவிலில் 20 செ.மீ, கொள்ளிடத்தில் 19 செ.மீ, தரங்கம்பாடியில் 18 செ.மீ., மணல்மேட்டில் 11 செ.மீ. மயிலாடுதுறையில் 16 செ.மீ மழையும் பதிவானது. ஆனால், மாவட்டத்தில் சீர்காழியில் மட்டும் அண்மைக்காலத்தில் இதுவரை பதிவாகாத அளவுக்கு, நேற்று காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டும் வெறும் 14 மணி நேரத்தில் 30 செ.மீ. மழை பதிவானது. கடந்த 24 மணி நேர அளவில் பார்க்கும்போது, 43 செ.மீ மழை சீர்காழியில் மட்டும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




இந்நிலையில் கடந்த 12 மணி நேரத்திற்கு முன்பு இதுவரை சீர்காழி கண்டிராத மழை பெய்த சூழலில், தற்போது அதற்கு மாறாக 13 மணி நேரம் கடந்தும் தற்போது வரை ஒரு துளி மழை கூட இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் நேற்று பெய்த மழையினால் உறைந்து போன பொதுமக்கள் தற்போது பெருமூச்சு விட தொடங்கியுள்ளனர். மேலும் சீர்காழியின் பல பகுதிகள் தற்போது வெள்ளநீரில் மிதந்து வருகிறது. புதிதாக உருவான பல வீட்டுமனை குடியிருப்புகள் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல இடங்கள் ஏரிகளாகவும், அவற்றில் இருக்கும் வீடுகள், மிதக்கும் வீடுகள் போலவும் காட்சியளிக்கின்றன.




மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டதைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. வரலாறு காணாத மழை பதிவாகியதால், அரசு இயந்திரம் முதலில் திணறினாலும், தற்போது மழை விட்டுள்ள நிலையில் முழுவீச்சில் நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. ரெட் அலர்ட் எனும் மிக கனமழை பெய்யும் என சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டதால், முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவில் பேரில் எடுக்கப்பட்டிருந்ததால், பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இருப்பினும் வெள்ளத்தில் பலபகுதிகள் தவிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. 




மாவட்டம் முழுவதும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.  குறிப்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது இந்த பெரும் பாதிப்புக்கு காரணம் என பலரும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.