மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்த புங்கனூர் கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக அருணாசலம் என்பவர் பணியாற்றி வருகிறார். இயல்பாகவே ஏழை எளிய மக்களுக்கு உதவும் குணம் கொண்ட இவர், தான் கல்வி போதிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கணினி உபகரணங்கள், நோட்புக் , பேனா உள்ளிட்ட உதவிகளையும், மழை, வெள்ளம், புயல், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் இடர்பாடுகள் சிக்கிய மக்களுக்கும் உணவு, உடை உள்ளிட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.




இந்நிலையில் மாணவர்களை தன் குழந்தைகள் போல் போல பாதுகாத்து நேசித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் இவர், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் சுகாதாரமற்ற முறையில் நிலத்தடி நீரை நேரடியாக குடிப்பதற்கு பயன்படுத்துவது கண்டு இதற்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என எண்ணிய அவர் தனது அமெரிக்கா வாழ் இந்தியரான தனது நண்பர் மோகன் சுதிர் பட்டாவுடன் இணைந்து  சுமார் 10 லட்சம் ரூபாய் திரட்டினார்.




குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்:


தற்போது புங்கனூர், வைத்தீஸ்வரன் கோயில், எடமணல் உள்ளிட்ட ஆறு அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் பொன்செய் சிவன் கோயில் ஆகியவற்றிற்கு 11 இடங்களுக்கு தலா 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கியுள்ளார். அதேபோன்று இரண்டு மருத்துவமனைகளுக்கு கட்டில், மெத்தை, சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவைகளையும் வழங்கியுள்ளார். அதற்காக நிகழ்வு இன்று புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.




இதில் சிறப்பு அழைப்பாளராக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு  பள்ளி  மற்றும் மருத்துவமனைக்கான உதவிகளை அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களிம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் சீர்காழி வட்டார கல்வி அலுவலர்  பூங்குழலி மற்றும் நாகராஜ், கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் கோமதி, வட்டார மேற்பார்வையாளர்கள், ஜெய்சங்கர், ஞானபுகழேந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா பேகம் வஜுருதீன், பள்ளி தலைமையாசிரியர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 




காரணம் என்ன?


இதுகுறித்து அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் அருணாசலம் கூறுகையில், அரசுப்பள்ளி மாணவர்கள் பலரும் சுகாதாரமான குடிநீர் அருந்தாமல், அதனால் பல நோய் தொற்றுகளுக்கு ஆளாகி வருவதை ஒரு அறிவியல் ஆசிரியராக உணர்ந்தேன். அதனைத் தொடர்ந்து தன்னால் முடிந்த அளவிற்கு அரசு பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிப்பு இந்திரங்கள் வழங்க வேண்டும் என முடிவெடுத்து தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டு முதற்கட்டமாக இந்த பத்து பள்ளிகளுக்கும்,




படிப்படியாக மேலும் பல பள்ளிகளுக்கு இதனை செய்ய உள்ளேன் எனவும், இதேபோன்று கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் அரசு மருத்துவமனைகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், கட்டில், மெத்தை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், தன்னுடைய தாத்தா, அப்பா, அம்மா இவர்கள் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் அவர்களை தொடர்ந்து தற்போது தானும் தன் குடும்பத்தினரும் இதுபோன்ற நற்காரியங்களில் ஈடுபட்டுவருவதாவும்,




இது மாணவர்கள் மத்தியில் மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவேண்டும் என தெரிவித்தார்.


மேலும் அரசு பள்ளி ஆசிரியர் அருணாசலம் கொடை உள்ளத்தோடு ஆற்றியுள்ள இந்த தொண்டுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொருவரும் ஆசிரியர் அருணாச்சலம் போல மாணவர்களுக்கு தொண்டு செய்ய நினைத்தால் அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயரும் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.