மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 -ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகின்றது. போதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் பல்வேறு விதங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒன்றாக சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை சார்பில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது.




மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக பேரணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளான பறை இசை, கருப்பண்ணசாமி, காளி ஆட்டத்துடன் மாணவர்களின் சிலம்பாட்டத்துடன் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பாடலுடன் நடைபெற்ற பேரணியில் 300 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு கம்மங்கூழ் அருந்தினால் தெம்பு கள்ளச்சாராயம் அருந்தினால் வம்பு, கள்ளச்சாராயத்தை அருந்தி  எதிர்கொள்ளாதே பேராபத்தை, கள்ளச்சாராயத்தை குடிக்காதே கண் பார்வை இழந்து தவிக்காதே, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் கிடைப்பது சிற்றின்பம் அதுவே உன் குடும்பத்திற்கு பெருந்துன்பம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி  நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர். 


Pending Bills: ஆளுநர் ஒப்புதல் அளிக்காத 13 மசோதாக்கள்..தவறான தகவலை தெரிவித்தாரா ஆளுநர் ஆர்.என். ரவி..? உண்மை என்ன..?




தொடர்ந்து மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் பேரணி முடிவடைந்தது. அங்கு நாட்டுப்புற கலைஞர்கள் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி அங்கு கூடியிருந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, காவல் துணை கண்காணிப்பாளர்கள் சஞ்சீவ்குமார், நீலகண்டன், காவல் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.