காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்கள் ஆன நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தரையோடு தரையாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீர் வாய்க்காலில் பாய்ந்தால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் என்ற நிலையில் திருவாரூர் அருகே மாங்குடி கல்யாணமாதேவி வடகரை சேந்தனாங்குடி தென்னவராயநல்லூர் திருநெய்பேர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.



 

இந்த நிலையில் பாண்டவையாற்றில் தண்ணீர் குறைந்த அளவு செல்வதால் அதிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் பயிர்கள் கருகும் நிலைக்கு உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி வயல்கள் தண்ணீர் இல்லாமல் வெடித்து காணப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்கவில்லை என்றால் பயிர்கள் முற்றிலும் கருகி அழிந்து விடும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



 

உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாண்டவையாற்றில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டு பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதுவரை ஒரு ஏக்கருக்கு 9 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், குறிப்பாக உழவு அடிப்பதற்கு ஐந்தாயிரம் ரூபாயும் அண்டை போடுவதற்கு 1500 ரூபாய் விதை நெல் 1300 ரூபாயும் தண்ணீர் பாய்ச்ச தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் என 9 ஆயிரம்  செலவு செய்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் முறை வைக்காமல் கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.