தமிழ்நாடு  மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி தமிழ்நாடு கடற்கரை பகுதியில் கடலில் மீன்வளத்தை வளம் குன்றா வகையில் பேணிகாத்திடவும், கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை சூழ்நிலைத்தன்மையை பாதுகாத்திடவும், மீன் வளர்ப்பினை அதிகரிக்கும் பொருட்டும் மற்றும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திடவும், தமிழ்நாடு அரசால் கடலில் இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகள் மற்றும் அதிவேக எஞ்சின் பெருத்திய படகுகள் கொண்டு மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 




இந்நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி பயன்படுத்தும் மீனவர்களுக்கும் அதனை எதிர்க்கும் மீனவர்களுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனைகள் இருந்து வருகிறது. இப்பிரச்சனை காரணமாக அவ்வப்போது மீனவர்களிடையே மோதல் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மற்றும் தரங்கம்பாடி தாலுக்காகளை சேர்ந்த  திருமுல்லைவாசல், பூம்புகார், பழையார், சந்திரபாடி  உள்ளிட்ட இடங்களில்  மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், அதனை மறுக்கும் பட்சத்தில் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பல்வேறு கட்ட  போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.




இந்த பிரச்சினை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அதிகபடியான கிராமங்களில் அரசு அறிவுறுத்தலின்படி விசைப் படகுகளில் இருந்து ஸ்பீடு இன்ஜின் மற்றும் சுருக்கு மடிவலையை முற்றிலும் இறக்கிவிட்ட நிலையில், அரசால் தடைசெய்யப்பட்ட ஸ்பீட் இன்ஜின் மற்றும் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி தொழில் செய்யும் பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், சந்திரபாடி ஆகிய கிராமங்களில் உள்ள விசைப்படகுகளில் ஸ்பீடு என்ஜின் மற்றும் சுருக்கு மடி வலையை வருகிற 24- ஆம் தேதிக்குள் முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டகளை சேர்ந்த சுருக்கு மடி வலைக்கு எதிரான கிராம  மீனவர்கள்  தலைமை மீனவ கிராமமான அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் புகார் மனு ஒன்றினை கடந்த 13 ம் தேதி  அளித்தனர். அவ்வாறு, அகற்றப்படாத பட்சத்தில் வருகிற 27-ஆம் தேதி 8 மாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து, அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் ஆட்சியரிடம்  தெரிவித்து சென்றனர்.




இந்நிலையில் இன்று   சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் மீனவ கிராம மீனவர்கள் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது என்றும். கடன்வாங்கி சுருக்கமடி மீன்பிடி தொழிலில் முதலீடு செய்துள்ள மீனவர்கள், சுருக்கமடிவலை தடையால் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் செய்ய முடியாமல் முடங்கி  பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் எனவும், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்  என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் பூம்புகாரை தலைமை கிராமமாக கொண்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.





பின்னர் இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 18-ஆம் தேதி பூம்புகாரில் கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983- இன்படி, அரசு சுருக்கு வலையை மட்டும் தடை செய்துள்ளது. ஆனால் அச்சட்டத்தில் உள்ள 21 அம்ச மீன்பிடிதடை சட்ட ஒழுங்குமுறைகளை மீறி அனைத்து கிராமங்களும் தொழில் செய்து வருகின்றன. அவ்வாறு தொழிலில் ஈடுபட்டுள்வர்களை உடனடியாக தடை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றும். அந்த சட்டங்களை மீறும் கிராமங்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.