தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் "மாண்டஸ் புயல்" மழையினை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 




மாவட்டத்தில் 4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளது. மேலும் 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என 346 ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை தொடர்பான எச்சரிக்கைகளை அளித்திட 26 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களாக 12 பகுதிகள், அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 33, குறைந்த அளவு பாதிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


மொத்தம் 4500 -க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளார்கள். புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக அகற்றி இயல்பு நிலை ஏற்படுத்திட ஏதுவாக பொக்களை இயந்திரங்கள் 34, ஜெனரேட்டர்கள் 7,  ஹிட்டாச்சி 10, ஆயில் என்ஜின்கள், மணல் மூட்டைகள் 26870, மரம் அறுக்கும் கருவிகள், சவுக்கு கம்பங்கள் 23065,  பிளிச்சிங் பவுடர் 4700 கிலோ ஆகியன் போதிய அளவில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.




மேலும், வட்ட அளவிலான முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, தங்குமிடம் மற்றும் பராமரிப்புக்குழு ஆகிய குழுக்கள் ஒவ்வொரு வட்டத்திற்கும் 10 அனைத்து துறை அலுவலர்களைக்கொண்ட தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 வட்டத்திற்கும் துணை ஆட்சியர்கள் தலைமையில் ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனித்தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் உள்ளார்கள், மேலும் பேரிடர் நிலைமையினை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புப்படையினர்  அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட ஒரு குழு ஏற்கனவே வரப்பெற்று சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.


மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் புயல் மழை காலங்களில் பாதுகாப்பாக இருக்கவும், அரசின் எச்சரிக்கைகளை முழுமையாக கடைபிடித்து நடந்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது எனவும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லலிதா கேட்டுக்கொண்டுள்ளார் .




மேலும், மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் காற்றுடன் மிதமான மழைபெய்ய துவங்கியுள்ளதால்  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று டிசம்பர்  9-ஆம் தேதிஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற