தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் கடந்த 2005 -ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். அதனைத்தொடர்ந்து தீவிர அரசியல் பணிகளில் விஜயகாந்த் இறங்கினார். 2006 -ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்திற்குள் சென்றார். அதன் பிறகு 2011 -ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த காலக்கட்டத்தில் அதிக இடங்களில் தேமுதிக வெற்றி பெற்று தமிழ்நாடு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.




அப்போது, சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வில் விஜயகாந்த் நாக்கை கடித்துக்கொண்டு ஆவேசமாக ஆளுங்கட்சியினரை பார்த்து பேசியது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே விஜயகாந்த் சட்டப்பேரவையில் பேசியது, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது, அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசியது என  அனைத்தும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. அது தேமுதிகவிற்கு சற்று தாக்கத்தை ஏற்படுத்தியது. 2016 -ஆம் ஆண்டு தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. தொடர்ந்து விஜயகாந்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.




இதனை அடுத்து வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்டு விஜயகாந்த் சென்னை திரும்பினார். பின்னர் சற்று உடல்நலம் தேறினாலும், பொதுவெளிகளில் விஜயகாந்த் தலைக்காட்டாமல் இருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் குறித்து பல வதந்திகள் பரவ, குடும்பத்துடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ அவரது தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. கொரோனா காலத்திற்கு பின்னர் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் கடந்த ஆண்டு தொண்டர்கள், ரசிகர்கள் முன்பு தோன்றி கையசைத்து பேசினார். அவரின் நிலையை கண்டு பல தொண்டர்கள் கண் கலங்கினர். இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் 71 வது பிறந்தநாள்  விழா தேமுதிக தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 25 ம்தேதி கொண்டாடப்பட்டது.




நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் ரசிகர்கள் முன்பு தோன்றி கையசைத்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். தன்னால் கையைக்கூட அசைக்க முடியாத நிலையில், இருந்தாலும் பிறந்தநாள் அன்று ரசிகர்களை பார்க்க வந்தது தொண்டர்கள் மட்டுமின்றி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேமுதிகவின் விஜயகாந்த்தின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒன்றாக தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் தேமுதிகவின் 19 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நடைபெற்றது.



மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ஜலபதி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில கலை இலக்கிய அணி செயலாளர் பி.ஜி. ராஜ்மோகன், ஒன்றிய கவுன்சிலரும் மாவட்ட அவைத்தலைவருமான கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து நலத்திட்டங்களாக பொதுமக்களுக்கு 25 கிலோ அரிசி, காய்கறி, தையல் மெஷின், விவசாயிகளுக்கு தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நிறைவாக தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் திரைப்படப் பாடலுக்கு ஏற்ப மாநில பொதுக்குழு உறுப்பினர் பண்ணை பாலு மற்றும் தொண்டர்கள் சிலர் மேடையில் குத்தாட்டம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.