தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலையின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் குர்ஆனோ வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை என கோவில்களில் ஆடி மாத திருவிழாக்களில் மக்கள் அதிகளவு கூடும் சூழல் நிலவுவதால், கோவில் திருவிழாக்கள் மற்றும் மதவழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. 




மேலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா கட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆடி பெருக்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்டம் கூடினால் சமூகஇடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால்  கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் 9 ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிபெருக்கினை கொண்டாட தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 





இந்நிலையில்  பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சூழலில் கடந்த பல ஆண்டுகளாக காவிரி தண்ணீர் துலாக் கட்டத்திற்கு ஆடி பெருக்கன்று வராததை அடுத்து பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் முறையாக வழிபாடு செய்ய முடியாமல் தவித்து வந்தனர். தற்போது மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மயிலாடுதுறை காவிரி துலா கட்டம் முழுவதும் நிரம்பி செல்கிறது இதனால் மகிழ்ச்சி அடைந்த மயிலாடுதுறை மாவட்ட மக்கள் இம்முறை சிறப்பான முறையில் ஆடிப்பெருக்கு வழிபாட்டினை காவிரி துலா கட்டத்தில் மேற்கொள்ளலாம் என ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.




ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மாவட்ட நிர்வாகம் காவிரி துவக்கத்தில் வழிபாடு செய்ய தடை விதித்து இருந்தது. இருந்தபோதிலும் பொதுமக்கள் பலரும் அதனை பொருட்படுத்தாமல்  தடையைமீறி  ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர். காலை முதலே பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடி வருகின்றனர். மயிலாடுதுறை காவல்துறையினர் கட்டுப்பாடு காரணமாக வழிபாட்டிற்கு தடை விதிக்காமல் பொதுமக்களுக்கு  பாதுகாப்பாக பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கடற்கரை மற்றும் காவிரி கிளை ஆறுகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறை  தடை உத்தரவை மீறி ஏராளமான பொதுமக்கள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு படையலிட்டு வழிபாடு நடத்திவருகின்றனர்.