சீர்காழியில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளரை காரில் கடத்தி கொண்டு வந்து மன்னார்குடி அருகே தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பல்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில்  மன்னார்குடியிலிருந்து பேருந்து மூலம் சீர்காழி பேருந்து நிலையத்தில் சென்று  இறங்கினார். அப்போது அங்கு இவருக்காக காத்திருந்த மர்ம கும்பல் காரில் வலுக்கட்டாயமாக அவரை ஏற்றிக்கொண்டு கடத்திச் சென்றுள்ளது. காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த அந்த கும்பல். காரில் இருந்த ராஜேந்திரனை கடுமையாக மிரட்டியும் சரமாரியாக தாக்கியும் உள்ளனர். மேலும் அவரது வலது கால் தொடையில் கத்தியால் குத்தி உள்ளனர்.

 

தொடர்ந்து நேற்று இரவு 8 மணி அளவில் அவரை மன்னார்குடி அருகே உள்ள சவளக்காரன் பகுதியில் யாரும் இல்லாத இடத்தில் தூக்கி வீசி விட்டு சென்றனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ராஜேந்திரனை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்த மன்னார்குடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீர்காழி  நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி மற்றும் மன்னார்குடி நகராட்சி ஊழியர்கள் ராஜேந்திரனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.



இந்த கடத்தல் சம்பவம் வேறு ஏதேனும் சொத்து பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா, அல்லது சீர்காழி பகுதியில் பணியாற்றியபோது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நிகழ்ந்ததா, என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ராஜேந்திரன் கூறிய தகவலின் அடிப்படையில் தன்னை இறக்கிவிடும் போது தனது உறவினர் தன்னை கடத்தி மிரட்ட சொன்னதாகவும் இரண்டு லட்ச ரூபாய் இதற்காக பேரம் பேசியதாகவும் ஆனால் 30,000 ரூபாய் மட்டுமே கடத்த சொன்னவர் தங்களுக்கு தந்ததாகவும் ராஜேந்திரனை கடத்திய நபர்கள் கடத்தி வந்த காரில் கடத்தல்காரர்கள் பேசி வந்ததாக ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை காரில் கடத்தி வந்தவர்கள் 5 பேர் கொண்ட கும்பல் எனவும் சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார், காரில் கடத்தி வந்த பொழுது என்னை கடுமையான ஆயுதங்களால் அவர்கள் தாக்கியதாகவும் மேலும் கையில் வைத்திருந்த கத்தியால் என் தொடையில் அவர்கள்  குத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.




சுகாதார ஆய்வாளரை கடத்தியவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி மன்னார்குடி நகராட்சி அருகே நகராட்சி ஆய்வாளர் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.