ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ஆம் தேதி காவிரி தாயை போற்றும் வகையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆடிப்பெருக்கு என்பது இந்துக்களின் சிறப்பு வழிபாடு நாள் ஆகும். பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறு மற்றும் குளங்களில் சென்று மாம்பழம், வாழைப்பழம், பேரிக்காய், உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து நீர்நிலைகளில் வணங்கி வழிபாடு நடத்தி தங்கள் கை மற்றும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்ந்து வருவது வழக்கம்.

 

மேலும் விவசாயிகளும் இந்த நாளில் வழிபாடு நடத்தி சம்பா சாகுபடி பணிகளை தொடங்குவர்கள். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தினால் கடைமடை மாவட்டங்களான திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆடிப்பெருக்கு வழிபாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டது. காரணமாக அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் செல்கிறது. இன்று நீர்நிலைகளுக்கு விதைகளை வைத்து படையலிட்டு விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் அந்த விதைகளை தெளிப்பார்கள், இதன்மூலம் பயிர்கள் அதிகம் விளைந்து விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் என்ற நோக்கத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாவை விவசாயிகளும் ஏராளமானோர் கொண்டாடி வருவது வழக்கம். இருந்த போதிலும் ஆறுகளில் எப்பொழுதும் உள்ள கூட்டத்தை விட குறைந்த அளவு மக்களே ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தி வருகின்றனர்.



குறிப்பாக திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளத்தில் ஆண்டுதோறும் சுற்று வட்டார மக்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் கூடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருவார்கள், ஆனால் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக குளங்கள் மற்றும் ஆறுகளில் பொது மக்கள் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினர் வலியுறுத்தி இருந்ததன் காரணமாக, திருவாரூர் கமலாலயக் குளத்தின் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் வந்து திரும்பிச் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டது.

 

இதேபோன்று திருவாரூர் அருகே மாங்குடி பகுதியில் ஓடும் பாண்டவையாற்றில் அதிகாலை முதல் ஏராளமான பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவை ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடி வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பொதுமக்கள் யாரும் ஆற்றுக்கு வந்து வழிபாடு நடத்தவில்லை. மேலும் திருவாரூர் நகர்ப்பகுதியில் ஓடும் ஓடம்போக்கி ஆற்றில் குறைந்த அளவு  மகளிர் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். நீர்நிலைகளுக்கு படைக்கும் விதமாக பல வகைகள் மற்றும் அரிசி நவதானியம் வளையல் கண்ணாடி உள்ளிட்டவைகள் வைத்து படையலிட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்பொழுது பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறை கட்டிக்கொண்டும் நெற்றியில் குங்குமம் வைத்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.



கொரோனா தொற்று காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று வரை கோவில்கள் மற்றும் நீர் நிலைகளில் வழிபாடு நடத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததன் காரணமாக அனைத்துக் கோயில்களும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளிலும் குறைந்த அளவு மக்களே ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருவதால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா கலை இழந்து காணப்படுகிறது.