சீர்காழி, சட்டைநாதர்  கோவிலின் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில், யாகசாலை பூஜைகளில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக் கொடி காண்பித்தும் கண்டன முழக்கமிட்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.




இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மே 24 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சட்டைநாதர் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில், இருபதாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 24 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.




கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16 -ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து  உப்பனாற்றில் இருந்து குதிரை, ஓட்டங்கள் உள்ளிட்ட மங்கள சின்னங்கள் முன்னே செல்ல மேளதாள வாத்தியங்கள் முழங்கு நான்கு யானைகள் மீது கடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து  மாலை மேற்கு கோபுர வாசல் அருகே 82 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. பின்னர் 8 மணிக்கு மேல்  முதல் கால யாகசாலை பூஜைகளளுடன் தொடங்கி பூஜைகள் நடைபெற்று வருகின்றனர்.  இந்நிலையில் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் சார்பில் பல்வேறு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், ஆளுநர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 




கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எட்டு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை ஏழாம் காலை யாகசாலை பூஜைகள் நடைபெற இருந்தது அதற்கு முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தலைமையில் 500 - க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இந்த சூழலில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 3.50 மணி அளவில் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்த போது, சிதம்பரம் - மயிலாடுதுறை பிரதான சாலையில் அரசூர் என்ற பகுதியில் ஆளுநர் ரவி அவர்களின் காரை வழிமறிக்க முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்பு கொடி காண்பித்தும், கண்டன முழக்கங்களிட்டும் எதிர்ப்பை காட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 




தொடர்ந்து ஆளுநர் திரும்பி செல்ல வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட துணை செயலாளர் குமரேசன், மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜய், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், சீர்காழி ஒன்றிய செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன் ஆகியோரை  அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். கடந்த முறை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தபோது பல்வேறு அரசியல் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி அவர் கார் மீது கல்லெறிந்ததும், தற்போதும் தர்மபுரம் ஆதீனத்தை சந்தித்து தர்மபுரர் தினத்திற்கு சொந்தமான கோவில் கும்பாபிஷ விழாவில் கலந்து கொள்ள வந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டியது குறிப்பிடத்தக்கது