தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதால், மீனவா்களிடையே பல்வேறு பிரச்னைகள் மற்றும் மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், மீன்வளமும் அழிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.




இதைக் கருத்தில்கொண்டே மீனவா்கள் சுருக்கு மடி, இரட்டை மடி உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட  வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி வருகிறது. மேலும், மீனவா்கள் எவரேனும் தடை செய்த மீன்பிடி வலையான சுருக்கு மடி வலை, இரட்டைமடி வலைகள் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட மீன்வளத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கத் தவறும் பட்சத்திலும், எதிா்வரும் காலங்களில் தடைசெய்த மீன்பிடி வலையான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பது தெரியவரும் பட்சத்திலும், தடைசெய்யப்பட்ட இந்த வலைகளை மறைமுகமாக பெரிதும் லாபம் தரும் நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மீனவா்களுக்கு விற்பனை மற்றும் விநியோகம் செய்வோா் மீதும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில், மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் படி தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறையை நடைமுறை படுத்தாமல் சுருக்குமடி வலையை மட்டும்  தடை செய்துள்ளதாகவும். தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும்  மற்ற மீனவர்களுக்கு அரசு அனுமதித்து வருவதாகவும். எனவே, சுருக்கு மடி மீனவர்களையும் கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் அவர் அவர் கிராமங்களில் கடந்த மூன்று தினங்களாக தொடர்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி உள்ளிட்ட 4  இடங்களில்  15 கிராமங்களை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மீனவர்கள் சுருக்கு மடி வலை அனுமதி கோரி மூன்றாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ள நிலையில் நேற்று  இரவு மீன்வளத்துறை திகாரிகள் மத்தியில் நடைபெற்ற இரண்டுகட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து மூன்றாவது நாள் போராட்டமாக இன்று அந்தந்த கிராமங்களில் இருந்து நடைபயணமாக சென்று சீர்காழி தாலுக்கா அலுவலகம் மற்றும் தரங்கம்பாடி தாலூக்கா அலுவலங்களில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,  ஒப்படைக்கும் போராட்டத்திற்கு மீனவர்கள் பேரணியாக புறப்பட்டனர் . இதனால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.




திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் இருந்து தங்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை சீர்காழி வட்டாட்சியரிடம் ஒப்படைக்க 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பேரணியாக சென்றனர். அவர்களை காந்தி நகர் என்ற பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அவர்கள் மீண்டும் பேரணியை தொடங்கினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த துணை வட்டாட்சியரிடம் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனர்.




முன்னதாக பூம்புகார் மீனவர்கள் பூம்புகார் கடற்கரையில் உள்ள கண்ணகி சிலையிடம் தங்களது கோரிக்கை மனு அளித்தனர். அதனைத்தொடர்ந்து பெண்கள் உட்பட 2000 மீனவர்கள் அங்கிருந்து நடந்து பேரணியாக புறப்பட்டனர். அவர்களை காவிரிப்பூம்பட்டினம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து மீனவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரையும் மீறி மீண்டும் பேரணியாக சீர்காழி நோக்கி செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் மற்றும்  தாசில்தார் சண்முகம் காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மீனவர்கள் தங்களது குடியுரிமை அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். 




மடவாமேடு, பழையாறு,கொட்டாய்மேடு சந்திரபாடி உள்ளிட்ட 15 கிராம மீனவர்கள் அந்தந்த பகுதி வருவாய்த்துறை   அலுவலர்களிடம் தங்களது குடியுரிமை அடையாள அட்டை, ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஆகியவற்றை ஒப்படைத்தனர். மேலும் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தங்கள் உண்ணாவிரத போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.