lகாவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியாக பழையாறு கடலில் சென்று சேரும். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி அருகே கொள்ளிடம் கரையோர கிராமங்களில் தண்ணீர் உப்புகுந்துள்ளது. 




சீர்காழி தாலுகாவில் அளக்குடி, நாதல்படுகை, முதலைமேடு, வெள்ளமணல் உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடம் கரைக்கு உட்புறம் உள்ள திட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.  மேலும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தாழ்வான பகுதியில் உள்ளவர்களை மேடான பகுதிகளுக்கு தங்க அறிவுறுத்தி இருந்தனர். 




இந்நிலையில்  கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு கரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றுப் படுகை கிராமங்களான வெள்ளைமணல், நாதல்படுகை, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விவசாய விலை நிலங்களில்  தண்ணீர் உட்புகுந்துள்ளது. சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட வெண்டை, கத்திரிக்காய், சோளம் முல்லை பூ உள்ளிட்ட பயிர்களை முற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.




இதே போல் முதலைமேடு திட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால். ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுடன் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பு முகாமுக்கு வருவாய்த் துறையினர் அழைத்து சென்றனர். இந்த சூழலில் மக்கள் செல்லும் வழியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு வேளையில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.


இதனை அறிந்து அப்பகுதிக்கு இரவு வேளையில் வந்த பக்கத்து தொகுதியான பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிவேதா.முருகன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அப்பகுதி கோரிக்கை ஏற்று உடனடியாக ஏற்படுத்தி கொடுத்தார். அதே வேளையில் வெள்ளம் பாதித்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் இப்பகுதி வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யாமல் வீட்டில் உறங்குகிறாரா? என அப்பகுதி மக்கள் தங்கள்  ஆவேசத்தை வெளிப்படுத்தினர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண