மன்னார்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல முதல் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள். கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் இவருடைய கணவர் உயிரிழந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மாரியம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்து அரிவாளை காட்டி மிரட்டி அரிவாளால் மாரியம்மாவை வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்கள். மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரியமமாவை மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மன்னார்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் கைரேகை மற்றும் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.



இந்த நிலையில் மாரியம்மாவின் தலை, காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதியில் கொள்ளையர்கள் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதுது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பொதுமக்கள் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் கொள்ளையர்களும் திட்டமிட்டு தங்களுடைய திருட்டு சம்பவங்களை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் நிறைவேற்றி வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



இது குறித்து காவல்துறையினரிடம் கேட்கும்பொழுது திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் பற்றாக்குறை என்பது அதிக அளவில் உள்ளது, இதன் காரணமாக காவல் நிலைய பணிகளுக்கு மட்டும் அல்லாமல் வெளியில் நடக்கும் பல்வேறு போராட்டங்களுக்கும் காவல்துறையினர் பாதுகாப்புக்காக சென்று விடுகின்றனர். இந்த நிலையில் ரோந்து வாகனங்களில் காவல்துறையினர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் இதே போன்ற சம்பவங்கள் ஒரு சில இடங்களில் நடந்து விடுகின்றன. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கும் குற்றவாளிகளிடமிருந்து நகைகளை மீட்டு பாதிக்கப்பட்ட நபர்களிடம் திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மற்ற துறைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையை அரசு உடனடியாக போக்குமோ இல்லையோ மக்களை பாதுகாக்கக்கூடிய காவல்துறையில் உடனடியாக ஆட்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.