திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஓஎன்ஜிசி லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் குமார். விவசாயி. இவருடைய மகள் அபிராமி (வயது 21) இதேபோல் அதே ஊரில் வசித்து வருபவர் மற்றொரு விவசாயி பாலசுப்பிரமணியன். இவருடைய மகள் சினேகா (21) அபிராமி மற்றும் சினேகா ஆகிய இருவரும் திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் இயங்கி வரும் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு தாள்களை அஞ்சல் மற்றும் கூரியர் மூலமாக அனுப்பி வைக்குமாறு கல்லூரி நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு தெரிவித்துள்ளது. இருப்பினும் கல்லூரி அருகே வசிப்பவர்கள் தேர்வு தாள்களை நேரடியாக கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர். இதேபோன்று தேர்வு தாள்களை கல்லூரியில் கொடுப்பதற்காக அபிராமி மற்றும் சினேகா இருவரும் நேற்று கல்லூரிக்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவரையும் இருசக்கர வாகனம் மூலம் வீட்டிலிருந்து அபிராமியின் தம்பியான முத்துக்குமார் (18). என்பவர் கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளார். 



அப்போது திருவாரூரை அடுத்த சீனிவாசபுரம் என்ற இடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வளைவு ஒன்றில் எதிரே வந்த ஓஎன்ஜிசி லாரியின் சக்கரத்தில் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முத்துக்குமார் மற்றும் அவரது பின்புறத்தில் அமர்ந்திருந்த அக்கா அபிராமி மற்றும் அவரது பின்னால் மூன்றாவதாக அமர்ந்திருந்த சினேகா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அபிராமி மற்றும் அவருடைய தம்பி முத்துக்குமார் இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருவாரூர் மேட்டு தெருவை சேர்ந்த சக்திவேல் (49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் ஒரு கல்லூரி மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அங்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.