அரசு மதுபான கடையில் அரசு நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்றதாக கூறி மூன்று டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார்.

 

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசு நிர்ணயித்த விலையை விட பத்து ரூபாய்க்கு மேல் கூடுதல் விலை வைத்து மதிப்பிரியர்களிடம் மதுவை விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும் விற்பனையாளர் உடன் மதுப்பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.



 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு மதுபான கடைகளில் டாஸ்மார்க் மேலாளர் பிரேம் சக்தி சுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் பேரையூர், முத்துப்பேட்டை, மணவாளன்பேட்டை ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைவைத்து மது விற்பனை செய்து வருவதாக வந்த புகாரையடுத்து திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மதிப்பிரியர்கள் நேரடியாக அவரிடம் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். அது மட்டுமன்றி அவர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.



 

அதனையடுத்து பேரையூர் அரசு மதுபான கடையில் பணியாற்றி வரும் விற்பனையாளர் ராஜ்கண்ணன் முத்துப்பேட்டை அரசு மதுபான கடையில் பணியாற்றி வரும் விற்பனையாளர் சுரேஷ், மணவாளன்பேட்டை அரசு மதுபான கடையில் பணியாற்றி வரும் குலோத்துங்க சோழன் ஆகிய மூன்று பேரும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு அரசு மதுபானங்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மூன்று பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அரசு நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்