தஞ்சாவூர்: குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தவர்களில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ஆதனூர் பகுதியை சேர்ந்த புனாஃப் ரிச்சர்டு ராய்யும் (28) ஒருவர் என்பது உறுதியானது. தொடர்ந்து அவரது உடல் தாயகத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியானது. இத்தகவலால் புனாப் ரிச்சர்டு ராய் பெற்றோர் தீயிலிட்ட புழு போல் துடிதுடித்து போய்விட்டனர். பேசவே முடியாத நிலையில் கண்ணீர் விட்டு கதறினர்.


குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு தங்கி இருந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். இதில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும், 5 பேர் தமிழர்களும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. தீப்பிடித்த போது அதில் இருந்து தப்பிக்க பலரும் மாடிகளில் இருந்து குதித்துள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆதனுார் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த மனோகரன். விவசாயி. இவரது மனைவி லதா. இத்தம்பதிக்கு புனாஃப் ரிச்சர்ட் ராய் (28), ருஷோ (25) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 2019 முதல் குவைத்தில் நாட்டில் மங்காப் என்ற இடத்தில் என்.பி.டி.சி என்ற கட்டுமான கம்பெனியில் குவாலிட்டி இன்ஸ்பெக்டராக ருனாஃப் ரிச்சர்ட் ராய் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ஊரில் கட்டப்பட்ட தங்கள் புதிய வீடு குடிபோகும் விழாவில் கலந்து கொள்ள சொந்த ஊருக்கு திரும்பி புனாஃப் ரிச்சர் ராய், ஒன்றரை மாதம் தங்கியிருந்தார். ஏப்ரல் மாதத்தில் தான் மீண்டும் குவைத்திற்கு சென்றுள்ளார். 


இந்நிலையில் குவைத்தில் புனாஃப் ரிச்சர்ட் ராய் தங்கியிருந்த கட்டிடத்தில்தான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலியானவர்கள் விபரம் குறித்து வெளியான நிலையில் புனாஃப் ரிச்சர் ராய் குறித்த விவரங்கள் ஏதும் தெரியாததால் பதறித் துடித்த அவரது பெற்றோர் செல்போன் எண்ணுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. அவருடைய நண்பர்களிடம் கேட்டபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. 


தகவல் அறிந்த பேராவூரணி எம்.எல்.ஏ., அசோக்குமார், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.பி., அப்துல்லா ஆகியோர் மூலம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். 


தங்களது மகன் குறித்த எந்த தகவலும் தெரியாததால், அவர்களின் பெற்றோர், உறவினர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில், குவைத் தீவிபத்து தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், தமிழகத்தை சேர்ந்த கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன், முகமது ஷெரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்ததை டி.வி.யில் பார்த்துவிட்டு அவரது உறவினர்கள் பதறி துடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோரும் அழுது புலம்பினர். ஆனால் நேற்று மாலை வரை அவர்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வராத நிலையே இருந்து வந்தது. 


தங்கள் மகன் புனாஃப் ரிச்சர்டு ராய் பெற்றோர் கூறுகையில், கடந்த 2019ம் ஆண்டு முதல் குவைத் நாட்டில் பணியாற்றினார். அவர் குவைத் சென்ற பிறகு தான் எங்கள் குடும்பம் வளர்ச்சி அடைந்தது. எனது மகன் சம்பாதித்து அனுப்பிய பணத்தில் புது வீடு கட்டினோம். அதன் கிரகப்பிரவேசத்திற்கு வந்த எங்கள் மகன் ஒன்றரை மாதம் இங்குதான் இருந்தார். அப்போது புது வீடு கட்டியாச்சு. அடுத்து உனக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கிறோம் என்று சொன்னதற்கு இப்ப திருமணம் வேண்டாம். திரும்பவும் வெளிநாடு போயிட்டு சம்பாதித்து வந்தால் பணப்பிரச்னை இருக்காது என்றார். பின்னர் குவைத்திற்கு சென்று விட்டார். இப்போது எங்களை விட்டே சென்று விட்டார். அவர்தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமும் என்று கதறி துடித்தனர். இந்நிலையில் பலியானவர்கள் விபரம் குறித்த இறுதி தகவல் பட்டியல் நேற்று இரவு வெளியான நிலையில் அதில் புனாஃப் ரிச்சர்ட் ராய் பெயர் மற்றும் விபரங்கள் இருந்தது உறுதியானது. இத்தகவலால் அவரது பெற்றோர் தீயிலிட்ட புழு போல் துடியாய் துடித்து விட்டனர். 


இதற்கிடையில் புனாஃப் ரிச்சர்ட் ராய் உடல் தாயகத்திற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஆதனூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.