தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர், பாபநாசம் வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் விதை ஆய்வாளர் (பொ)  நவீன் சேவியர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை டெல்டாவில் தற்போது குறுவை அறுவடை 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஒரு புறம் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.




தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை நடப்பாண்டு இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை 85 சதவீதம் நெல் அறுவடை நடந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மீதமுள்ள பகுதிகளிலும் அறுவடை முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் பணிகளும் நடக்கிறது. நெல் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டும் பிடிக்கப்படுவதால் விவசாயிகள் தங்களது அறுவடை செய்யப்பட்ட நெல்லை சாலைகளில் காயவைத்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்புக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டு அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





இந்நிலையில் கும்பகோணம், அம்மாபேட்டை, ஆடுதுறை, இரும்புதலை, திருக்கருக்காவூர், பாபநாசம் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட உரிமங்கள், விதை உரிமங்கள் நடப்பில் உள்ள விவரங்கள், சம்பா பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் இன்வாய்ஸ், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் என ஆய்வு மேற்கொண்டனர்.

விதைகளின் முளைப்புத்திறன் குறித்து விதை ஆய்வாளர்கள் மூலம் நெல் விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு தஞ்சாவூர் விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் விதை விற்றதற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை வழங்கினார்.