தமிழ்நாடு விவசாயிகள் நலனுக்காக கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து மேகதாது அணை என்ற கர்நாடகாவின் கருத்து உண்மையாக இருக்குமேயானால், அதனை கைவிட்டு ராசிமணலில் தமிழ்நாடு அணைக்கட்டிக் கொள்ள கர்நாடகம் அனுமதிக்க வேண்டி அவசரமாக தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயி சங்கங்களின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: காவிரி டெல்டாவில் கருகும் குறுவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடி பணியை தொடங்கிடவும் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அடிப்படையில் கொடுக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக விடுவிக்க கோரி அவசர வழக்கு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனை ஏற்று உச்ச நீதிமன்றம் தனி அமர்வு ஏற்படுத்தி விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது விவசாயிகள் சார்பில் வரவேற்கிறோம்.



 

இந்த வழக்கை எதிர் கொள்ள வேண்டிய கர்நாடக அரசு தமிழ்நாட்டில் தண்ணீரை கடலில் கலக்க செய்வதாகவும் அதனை தடுத்து மேகதாதுவில் அணை கட்டி தமிழ்நாடு விவசாயிகளுக்கு தண்ணீரை வழங்க தயாராக உள்ளதாகவும், எனவே காவிரி நீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு மேகதாது அணை கட்டுவது மட்டுமே தீர்வாகும் என உண்மைக்கு புறம்பாக, சட்டவிரோதமாக கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

 

எந்த சூழ்நிலையிலும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையிலும் அதனை உச்சநீதிமன்றம் உத்தரவாதப்படுத்திய அடிப்படையில் காவிரியின் குறுக்கே தமிழகம் நோக்கி வரும் தண்ணீரை தடுத்து அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்க்கு சட்டரீதியாக எந்த அனுமதியும் கிடையாது.

 

தமிழ்நாட்டிற்கு நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாதாந்திரம் தரவேண்டிய காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகம், பிரச்சினையை திசை திருப்பும் வகையில் சட்ட விரோதமாக மோதாது அணை கட்ட அனுமதி கோருவது ஏரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று கர்நாடகம் முயற்சிக்கிறது. உள்நோக்கத்தோடு தமிழ்நாட்டில் உபரி நீர் கடலில் கலப்பதை சொல்லி சட்டவிரேத மேகதாது அணை கட்டுமானத்தை நியாயப்படுத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல. 



 

தமிழ்நாட்டில் கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து தமிழ்நாடு விவசாயிகள் நலன் கருதி கர்நாடகம் மேகதாது அணை கட்ட நினைப்பது உண்மையாக இருக்குமேயானால், அதனை கைவிட்டு ராசிமணலில் தமிழ்நாடு அரசு அணையை கட்டி கர்நாடகாவுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்கும், மீதநீரை தமிழ்நாடு பயன்படுத்தி கொள்வதற்கும் கர்நாடக அரசு அனுமதிக்க முன்வர வேண்டும்.

 

ராசிமணல் அணை கட்டுவதற்கு 1964ல் அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் ராசிமணல் அணை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். இதனை தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்து கர்நாடகத்தின் நயவஞ்சக நடவடிக்கையை அம்பலப்படுத்தவும், உண்மைக்கு புறம்பாக சட்ட விரோதமாக மேகதாது அணையை கட்ட தமிழ்நாட்டில் உபரி நீரை கடலில் கலக்க செய்வதை தடுக்க போகிறேன் என்கிற பொய்யான கருத்தை நியாயப்படுத்த முயற்சிப்பதற்கு பதிலடி கொடுக்க முன் வரவேண்டும். ராசிமணல் அணை கட்ட உச்ச நீதிமன்றம் மூலமாக தமிழ்நாடு அரசு அனுமதி பெறுவதற்கான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசின் சட்டவிரோத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

 

இதுகுறித்து விவாதிக்க உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழ்நாடு அரசு அவசரமாக கூட்ட முன் வர வேண்டும். விவசாயிகளை இணைத்து கூட்டத்தை நடத்தப்பட வேண்டும். கர்நாடகம் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பு கர்நாடகத்திற்கு பாதகம் இல்லாமல் திசை திருப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதை முதலமைச்சர் உணர்ந்து அவசரகாலமாக செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.