திருவாரூர் அருகே 300 ஆண்டுகள் பழமையான படைவெட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


திருவாரூர் அருகே சேந்தனாங்குடி கிராமத்தில் ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த கோவிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மகா கணபதி பூஜையுடன் குடமுழுக்கு விழா துவங்கியது.



 

முன்னதாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சேந்தனாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்கவும் சீரான மழை பெய்து பயிர்கள் செழிப்பாக வளரவும் வேண்டி படைவெட்டி மாரியம்மனுக்கு அங்குள்ள விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து முளைப்பாரி வழிபாடு நடத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து மகா கணபதி ஹோமம் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று இன்று விடியற்காலை நான்காம் கால யாக பூஜை துவங்கியது.தொடர்ந்து மஹா பூர்ணாஹதி நடைபெற்று கட புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித கடங்களை சுமந்தவாறு ஆலயத்தைச் சுற்றி வந்தனர். அப்போது பக்தர்கள் பொரி மற்றும் மலர்களைத் தூவி அவர்களை வரவேற்றனர்.



 

இதனையடுத்து கடம் ராஜ கோபுரம் மற்றும் படைவெட்டி மாரியம்மன் உள்ளிட்ட ஏனைய பரிவாரத் தெய்வங்களின் கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் மந்திரங்களை முழங்க ஒரு சேர ராஜகோபுரம் மற்றும் படைவெட்டி மாரியம்மன் கோபுரம் ஆகியவற்றிற்கு கடத்தில் கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும், கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் ஆலயத்தை சுற்றியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கலசத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.