தஞ்சாவூர்: நமக்கு நீர் பிரச்சினையும் முக்கியம். நிதி பிரச்சினையும் முக்கியம்.  நீங்கள் நெருக்கி தள்ள தள்ள  தனியாக பட்ஜெட் போட வேண்டிய அவசியம் தமிழ் நாட்டுக்கு வந்து தீரும் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.


காவிரியில் உரிமை கோரி தஞ்சை பனகல் கட்டிடம் அருகே மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள்,விவசாய சங்கங்கள் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமை வகித்து பேசியதாவது:


டெல்லியில் நடக்கும் மைனாரிட்டி அரசு


நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை  இந்த ஒரு அறப்போரிலே முடிவு செய்கிறவர்கள் நாம் அல்ல. நம்முடைய எதிரி தான் அதை முடிவு செய்கிறார்கள். அந்த வகையில் தான் இன்றைக்கு இந்த தமிழ்நாட்டுக்கே எதிரியாக உள்ளது என்றால் அதுதான் டெல்லியில் நடக்கக்கூடிய மைனாரிட்டி பிரதமர் மோடியின் அரசுதான். 


பீகார், ஆந்திராவிற்கு மட்டும் கூடுதல் நிதி


பிரிவினைவாதம் என்பதை துவக்கி வைத்தது பிரதமர் மோடி தான்.  தேசிய ஜனநாயக முன்னணி என்ற  அமைப்பினுடைய பிரதமர் தான் மோடி. மத்திய அரசின் நாற்காலி காலாக உள்ள  இருவருக்கு மட்டுமே பட்ஜெட்ல நாங்கள் ஏராளமாக கொடுக்கிறோம் என்று கொடுத்துள்ளனர். பீகார் மற்றும் ஆந்திராவிற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் என்பது எதிரிகள் அல்ல. கூட்டாளிகள். வரி யார் கொடுப்பது. எங்கள் உரிமை என்ன ஆவது. 


காவிரி நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்


நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தாலும் அதை அமல்படுத்தவில்லையே. போராடி பெற்றது தான் காவிரி நீர் மேலாணமை ஆணையம். காவிரிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்த வேண்டும். நீதிமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றை தாண்டியதுதான் மக்கள் மன்றம். தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. எதிர்கட்சி தலைவராக உள்ள காங்கிரஸ் ராகுல் காந்தியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. 


பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது


பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் என்பது வரவு செலவுதிட்டம். தற்போது இதை மத்திய மைனாரிட்டி அரசு இதை அரசியல் ஆயுதமாக மாற்றி உள்ளது. நமக்கு  நீர் பிரச்சினையும் முக்கியம். நிதி பிரச்சினையும் முக்கியம்.  நாங்கள் பிரிவினையை கேட்கவில்லை. தமிழ்நாட்டின் வரிப்பணத்தை  நீங்கள் மற்றவர்களுக்கு வாரி கொடுக்குறீர்கள்.  தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், நான் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நன்மை செய்வேன் என்றார். 
அதுதான் இந்த அணியினுடைய வெற்றி.  இளைஞர்களே நீங்கள் தமிழ்நாட்டை காட்டிக் கொடுப்பவர்கள் யார் என்பதை அடையாளம் காணுங்கள்.  கலைஞர் ஒரு அற்புதமான வாசகத்தை தந்தை பெரியார் வழியிலே கூறியுள்ளார். உறவுக்கு கைகொடுப்போம். ஆனால் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று.  அந்த உரிமை நீர் உரிமையாக இருக்கலாம். 


தனி பட்ஜெட் போட வேண்டி வரும்


நிதி உரிமையாக இருக்கலாம் வேறு மாநில உரிமையாக இருக்கலாம். எந்த உரிமையாக இருந்தாலும் அந்த உரிமைக்காக கட்சி இல்லை, மதம் இல்லை. அனைவரும் ஒன்று சேர்வோம். போராடுவோம். வெற்றி பெறுவோம். தயாராகுங்கள். இது ஒரு ஒத்திகை. இனிமேல் தமிழ்நாடு முழுக்க நமக்குரிய நிதி ஆதாரங்கள் வருகின்ற வரையிலே வரும் இல்லை எனில்  நீங்கள் இப்படியே நீட்டிக்கொண்டு போனால் தனியாக பட்ஜெட் போட வேண்டிய அவசியம் தமிழ் நாட்டுக்கு வந்து தீரும். அந்த நாளை தான் நீங்கள் எங்களை நெருக்கி நெருக்கி தள்ளுகிறீர்கள். முடிவு செய்து கொள்ள வேண்டியது உங்களிடம் . அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தஞ்சை மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவையாறு எம்எல்ஏவும் திமுக மத்திய மாவட்ட செயலாளருமான துரை சந்திரசேகரன், தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், எம்எல்ஏ அன்பழகன், காங்கிரஸ் தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், சிபிஐ மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மா  கம்யூ., மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம் மற்றும் பலர் கண்டன உரையாற்றினர். திராவிடர் கழக தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி நன்றி கூறினார்.