தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் நேற்று காலை ஜல்லிக்கட்டு விழா நடந்தது. இதை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் தொடக்கி வைத்தார்.


ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய தமிழ் விளையாட்டாகும். இதற்கு ஏறு தழுவல் என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இதற்கு பயன்படுத்துவர். இந்த காளையை ஓடவிட்டு அதனை அடக்க வேண்டும். யார் அதை அடக்குகிறார்களோ அவர் வீரன் என கொண்டாடப்படுவர்.

'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணைக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களில் இது புகழ்பெற்றது. அதிலும் குறிப்பாக மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றவை. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. இத்தகைய புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று தடை கோரி வழக்குகள் போடப்பட்டன. கடந்த 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர்.




ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பல நாட்களாக போராட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சி வடக்குக்குளத் தெரு திடலில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர், வல்லம், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

முன்னதாக கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதிமொழியை வாசிக்க மாடு பிடிக்கும் வீரர்கள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். தஞ்சை புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 12 சுற்றுகளாக போட்டி நடந்தது. கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்த வீரர்களுக்கு மட்டுமே களத்தில் இறங்க அனுமதி அளிக்கப்பட்டனர்.




ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தஞ்சை கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் பரிசோதனைக்குப் பிறகு அனுமதித்தனர். தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாகப் பட்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டது.
 
பாதுகாப்பு ஏற்பாடுகளை வல்லம் டி.எஸ்.பி., நித்யா தலைமையில் 500க்கும் அதிகமான போலீசார் செய்திருந்தனர். இதில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், திருமலை சமுத்திரம் ஊராட்சித் தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

களத்தில் மாடுகளை பிடித்த வீரர்களுக்கு அண்டா, குடம், கட்டில், சேர் உட்பட  பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றிப் பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் பாரி வள்ளல் ஜல்லிக்கட்டு பேரவையினர்  செய்திருந்தனர்.