பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய முறையில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை மற்றும் சுற்று பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி சிறப்பாக தை முதல் தேதியில் கொண்டாடப்பட உள்ளது. விவசாயத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லில் சர்க்கரை பொங்கல் செய்து

  சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு படைப்பது வழக்கும்.


பொங்கல் திருநாளின்போது சர்க்கரை பொங்கல் செய்வது ஆதிகாலம் முதல் தற்போது வரை பொதுமக்கள் அச்சுவெல்லத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த அச்சுவெல்லம் தயாரிப்பதில் தஞ்சாவூர் மாவட்டம் முக்கிய இடத்தினை வகிக்கிறது. தொடக்க காலத்தில் கரும்பு ஆலைகள் இல்லாத போது, விவசாயிகள் கரும்பினை பயிரிட்டு அதனை தங்களுடைய இல்லங்களிலேயே சார் பிழிந்து, பெரிய கொப்பரையில் பாகு காய்ச்சி சரியான பக்குவத்தில் அச்சுவில் ஊற்றி அச்சுவெல்லத்தை தயாரித்து வருகின்றனர்.




காலப்போக்கில் சர்க்கரை ஆலைகளின் வரவால், கரும்பு உற்பத்தி அதிகரித்தாலும், குறிப்பிட்ட பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் இந்த வெல்லம் தயாரிப்பு முறை மட்டும் பாரம்பரியமாக மாறவில்லை. இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை பகுதியில் இலுப்பகோரை, மாகாலிபுரம், உள்ளிக்கடை, புதுத்தெரு, கிருஷ்ணாபுரம், கணபதி அக்ரஹாரம், இளங்கார்குடி, மனலூர், தேவன்குடி, வீரமாங்குடி, சோமேஸ்வரபுரம், செம்மங்குடி, பட்டுக்குடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் குடிசைச் தொழிலாக அச்சுவெல்லம் தயாரிக்கப்படுகிறது.


இங்கு தயாரிக்கப்படும் அச்சுவெல்லம் பெரும்பாலும் புகழ்பெற்ற மொத்த விற்பனை நடைபெறும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி வெல்லமண்டியில் தான் விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் வெல்லம் தயாரிப்பு இருந்தாலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகமாக வெல்லம் தயாரிக்கப்படும். இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.



இதுகுறித்து அச்சுவெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கணபதிஅக்ரஹாரம் முன்னோடி விவசாயி சீனிவாசன் கூறுகையில், பாபநாசம் பகுதியில் மட்டும் கடந்த காலங்களில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் வெல்லம் காய்ச்சுவதற்காக கரும்பு சாகுபடி செய்திருந்தோம். ஆனால் நெற்பயிர் சாகுபடி அதிகரிப்பாலும், போதுமான ஆட்கள் பற்றாகுறையினாலும், சர்க்கரை வரததால், கர்நாடகா போன்ற வெளிமாநிலத்தில் இருந்து வெல்லம் இறக்குமதி செய்வதால், போதுமான விலை கிடைக்காததால், கரும்பு சாகுபடி குறைந்து விட்டது. தற்போது சாகுபடி செய்துள்ள கரும்புகள் அனைத்தும் வெல்லம் காய்ச்ச பயன்படுத்தப்படுகிறது. வெல்லம் காய்ச்சும் பணியில் சேலம், உடுமலை, ஈரோடு, எடப்பாடி, கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குடும்பத்தோடு தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி அதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள். இதற்காக அவர்களுக்கு டன்னுக்கு 120 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது.



கரும்பு விவசாயிகள் அனைவரும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பிலும், ரேசன் கடைகளிலும்  சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தோம். இந்த ஆண்டு தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஏற்று சர்க்கரைக்கு பதில் வெல்லத்தை வழங்குவதாக கூறியுள்ளனர்.  தமிழக அரசு வெல்லம் தயாரிக்கும் உற்பத்தியாளர்களிடம் இருந்து வெல்லத்தை கொள்முதல் செய்யவேண்டும். ஆனால் வியாபாரிகளிடம் இருந்து வெல்லத்தை கொள்முதல் செய்வதால், விலை அதிகமாவதுடன், உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் போய் விடுகிறது. கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் வெல்லத்தை, கஷ்டமில்லாமல் வியாபாரிகள் அதிக லாபம் வைத்து விற்பனை செய்து விடுகின்றனர். ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  




மருத்துவர்கள் வெள்ளை சர்க்கரை சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் வருகிறது என்று கூறி வெல்லத்தை சாப்பிட அறிவுறுத்துகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்திலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வெல்லம் வழங்க வேண்டும்.  மேலும், ரேஷன் கடைகளுக்கு தேவையான வெல்லத்தை எங்களிடமிருந்து கொள்முதல் செய்தால் இங்குள்ள விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசு வெல்லம் உற்பத்தியாளர்களை ஊக்கவிக்க நேரடியாக கொள்முதல் செய்யாவிட்டால், வரும் காலங்களில் வெல்லம் உற்பத்தி அழிந்து விடும் என்றார்.