தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக புதிய 3 வகுப்பறைகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.



தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அரசு மேல்நிலை பள்ளியில் 19 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 வகுப்பறைகள், புதிய கழிவறைகள் மற்றும் 50 மேஜை பெஞ்ச்கள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அரசு மேல்நிலை பள்ளியில் 962 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர்கள் அமர்ந்து படிக்க போதுமான இட வசதியில்லாத நிலையால் சிரமப்பட்டு வந்தனர். மழைக்காலங்களில் மாணவர்கள் வெளியில் அமர்ந்து படிக்க முடியா நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் கல்வி கற்பதில் சிரமம் உருவானது. மேல்நிலைப்பள்ளி என்பதால் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என்ற நிலையால் பள்ளி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் 2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 வகுப்பறைகளை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து இப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா இந்த பள்ளி வகுப்பறை கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.





தொடர்ந்து, கும்பகோணம் பரஸ்பர நிதி லிமிடெட் சார்பில் 7.50 லட்சம் மதிப்பில் 50 மேஜை பெஞ்ச்களை மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் வழங்கினார். மேலும், பொதுமக்கள் நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 9 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை கட்டிடமும் கட்டப்பட்டு இருந்தது. இதுவும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், துணைத்தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், திமுக பேரூர் செயலாளர் பாலசுப்ரமணியம், தலைமையாசிரியர் லால் பகதூர் சாஸ்திரி, வழக்கறிஞர் விஜயகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் கேசவன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரிபயத்துல்லா மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், “தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் நலன் கருதி 3 வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. மேலும் கழிவறை வசதி, மாணவர்கள் அமர்ந்து படிக்க பெஞ்ச் வசதி போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் சிரமம் குறைந்து விட்டது. மழைக்காலங்களில் மாணவர்கள் இனி அவதிப்படும் நிலை இருக்காது. இதற்கு நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.