மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 -ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது, ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரவை தந்தது. 1993 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. 




இந்நிலையில் 1994 -ஆம் ஆண்டு 33 கோடி ரூபாயில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், ஒரு டன்னுக்கு  59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், நஷ்டத்தை சந்தித்து வந்த  ஆலையை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2015 -ம் ஆண்டில் 56 கோடி ரூபாய் நிதி ஆலை புனரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆலையை புனரமைப்பதற்கான நிதியை தமிழக அரசு வழங்கவில்லை. 




தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் 2017 -ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர். சர்க்கரை ஆலையை திறக்க கோரி பல்வேறு தொடர் போராட்டங்களை கரும்பு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தினர். இந்நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட்டில் தலைஞாயிறு சர்க்கரை ஆலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 




இந்நிலையில் சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது குறித்து ஆய்வுக்குழு அமைக்கப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார். இதையடுத்து இன்று புனரமைப்பு குழுத் தலைவர் அரசு சிறப்பு செயலர் ஆபிரகாம் தலைமையில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் உள்பட அதிகாரிகள் சர்க்கரை ஆலையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கரும்பு பிழியும் இயந்திரம், பாய்லர் உள்ளிட்ட ஆலையின் அனைத்து தளவாடங்களை பார்வையிட்டனர். தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக, இயந்திரங்களின் தற்போதைய நிலை குறித்து 10 பேர் குழு தற்போது ஆய்வு செய்தனர். 




இக்குழு ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னர், தொழில்நுட்ப குழுவினரால் ஆலை இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு  சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, ஆலை சீரமைக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலையை மீண்டும் இயக்க ஏதுவாக ஆலைக்கு தேவையான கரும்புகளை உற்பத்தி செய்து கொடுப்பதற்கு விவசாயிகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த 8 ஆண்டுகளாக பட்ட சிரமத்தை போக்கும் வகையில் இந்த ஆலை திறக்கப்படுவதற்கான குழு ஆய்வு செய்த நிலையில், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் தமிழக அரசு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளர்.