குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதை வைத்து, விதை தெளித்து, 30 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் நாற்றை பறித்து வயல்களில் நடுவார்கள். பின்னர் அதிலிருந்து 130 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் மாதம் இறுதியில் அறுவடை செய்வார்கள். ஆனால்  தற்போது ஆறுகளில் தண்ணீர் வந்தும்,  வாய்க்கால்களில் தண்ணீர் வராததால்,

  பெரும்பாலானோர் ஆழ் குழாய் மின்மோட்டாரை கொண்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின் மோட்டார் தண்ணீரை  கொண்டு குறுவை நடவு செய்துள்ளனர்.




இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால், வாய்கால்களில் மழை நீர் வடியாததால், மின் மோட்டாரினால் சாகுபடி செய்துள்ள பயிர்கள், தற்போது பால் பருவம் எனும் சூழ் பருவத்தில் உள்ள நிலையில் பாரம் தாங்காமல் வயலில் சாய்ந்துள்ளது. இதனால் இன்னும் சில நாட்கள் தொடர் பலத்த மழை பெய்தால், சாய்ந்துள்ள  அனைத்தும் நெற்பயிர்கள், முளைத்து பதறாகும் நிலை ஏற்படும்.


இதுபோல் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், கோவில்பத்து, கோவில்வெண்ணி, கோவிலடி, அவளிவநல்லுார் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது சூழ் பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் வயல்களில் சாய்ந்திருப்பதால், விவசாயிகள் வேதனைக்குள்ளாகியள்ளனர். இக்கிராமங்களில் உள்ள வாய்க்காலை சரிவர துார் வாராததால்,, மேலும் தொடர்ந்து மழை பெய்து,  பால் பருவம் எனும் சூழ் பருவத்தில் உள்ள பயிர்கள் அனைத்தும் வீணாகி பதறாகும்.




குறுவை பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடை செய்தால், ஒரு ஏக்கருக்கு  சுமார் 35 நெல் மூட்டைகள்வரை வரும், அதே தொடர் மழையினால், சுமார் ஏக்கருக்கு சுமார் 15 மூட்டை கிடைப்பதே சிரமமாகும். தற்போது சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளதால், குறுவை சாகுபடிக்காக ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்த தொகை அனைத்தும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. இனிவரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்து, சூழ் பருவத்தில் இருக்கும் குறுவை நெற்பயிர் பதறாகும்.  குறுவை சாகுபடிக்கு செய்த  செலவு தொகையை கிடைப்பதே சிரமமாகும்.




கூட்டுறவு வங்கிகளில் நகைகள், இடத்தின் பத்திரங்களை அடகு வைத்தும், தனியாரிடம் பணம் வட்டிக்கு வாங்கியும், குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், பலத்த மழையினால் வீணாகியுள்ள குறுவை சாகுபடிக்கு, அதிகாரிகள் பார்வையிட்டு, இழப்பீடு வழங்க வேண்டும்,  உடனடியாக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆறுகள், வாய்க்கால்களை துார் வாரி, வயலில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.