நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி கடைத் தெருவில் ஏ.கே. பிரியாணி ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு திருப்பூண்டி காரைநகர் 3 ஆவது வார்டு  ஊராட்சி மன்ற உறுப்பினர் ஞானசுந்தரி கனவர் சுரேஷ், சிபிஐ கட்சியைச் சேர்ந்த  கடுக்கா பக்கிரி, சிபிஎம் கட்சியைச் சேர்ந்த  கட்ட அஞ்சான் ஆகியோர் சாப்பிட்டுவிட்டு பிரியாணிக்கு காசு கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி கடையில் உள்ள பணிப் பெண்ணிடம் காசு கொடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் கடையை அடித்து நொறுக்கி உணவுப் பொருள்களையும் கீழே கொட்டி நாசப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து  கடை பணிப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க பாய்ந்த போது  அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு காப்பாற்றி உள்ளனர்‌.

 



 

பிரியாணி சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் ரகளையில் ஈடுப்பட்டு கடையை அடித்து நொறுக்கிய  திமுக வார்டு உறுப்பினரின் கணவர் சுரேஷ், கடுக்கா பக்கிரி, கட்ட அஞ்சான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து வர்த்தக சங்கத்தினர் மற்றும் முஸ்லிம் அமைப்பினர்கள் நாகை -திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில்  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழையூர்  போலீசார் குற்றவாளிகளை  கைது செய்து  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை  தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து செய்தனர்.