உலகப் புகழ்பெற்ற தேர் திருவிழா நடக்கவிருக்கும் சமயத்தில் திருவாரூர் தியாகராஜர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் கழிவறை கட்ட எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமய சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயத்தின் கிழக்கு கோபுர வாசலில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டும் பணிகளில் திருவாரூர் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்து அமைப்புகள் என்ன பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கழிவறை கட்டும் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பணியை நிறுத்த கோரி இந்த அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து சிறிது நேரம் கழித்து விடுதலை செய்தனர்.அதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை பணிகள் ஏதும் நடைபெறாது  என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அடுத்த கட்ட போராட்டம் கைவிடப்பட்டது.



 

இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் விக்னேஷ் தலைமையில் பாஜக தேமுதிக உள்ளிட்ட இந்து அமைப்புகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீயிடம் இது குறித்து மனு அளித்தனர்.இந்த மனுவில் கழிவறை வேண்டாம் என்று கூறவில்லை இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் கட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

இது குறித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் விக்னேஷ் கூறுகையில் கிழக்கு கோபுர வாசல் என்பது சிவனடியார்கள் தரையில் விழுந்து வணங்கக்கூடிய இடமாகவும் உற்சவம் மற்றும் தேரில் எழுந்தருளுதல் போன்றவற்றிற்கு இந்த வாசல் வழியாகத்தான் தியாகராஜ பபெருமான் வருவது வழக்கம். அதேபோன்று சாயரட்சையின் போது இந்திரன் இந்த வழியாக வந்து வழிபட்டதாக ஐதீகம் இருக்கிறது. அந்த அளவிற்கு புனிதமான இந்த கிழக்கு கோபுர வாசலில் கழிவறை கட்டுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.எனவே அந்த முயற்சியை கைவிட்டு  மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.