பருத்தி கொள்முதலை கைவிடுவதா? உண்மைநிலையை தெளிவுப்படுத்த முதல்வருக்கு பி.ஆர்,பாண்டியன் வேண்டுகோள்


கடந்த ஆட்சி காலத்தில் விவசாயிகள் பெற்று வந்த சலுகைகளை,  புதிய ஆட்சி பறிக்கும் நிலை மிகுந்த அச்சம் அளிக்கிறது


மன்னார்குடி கிடங்கு தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு-மத்திய அரசிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும்


தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன்,  தஞ்சாவூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசு நெல் கொள்முதலை கைவிடப் போவதாக விவசாயிகள் மத்தியில் மிகப் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய உணவுத்துறை அமைச்சர் தடையின்றி நெல் கொள்முதல் தொடரும் என அறிவித்த நிலையில், மத்திய வேளாண் துறை செயலாளர் கொள்முதல் செய்வதை நிறுத்த உள்ளோம் அப்படி மீறி கொள்முதல் செய்தால் அதனை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. உண்மை நிலையை தமிழக அரசு விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். தற்போது முன்பட்ட சம்பா அறுவடை பணிகள் தொடங்க உள்ளது. தமிழக அரசு தடை இன்றி கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகளை தொடங்கிட அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தி குறுவை கொள்முதலில் ஏற்பட்ட பாதிப்பு போல் சம்பாவில் தொடராதவாறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கை உடன் மேற்கொள்ள முன்வர வேண்டும்.



வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றதாக அறிவித்த மத்திய அரசாங்கம் தொடர்ந்து கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் மறைமுகமாக தொடர்கிறது. மத்திய அரசுக்கு சொந்தமான உணவு கிடங்குகள் இந்தியா முழுமையிலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. குறிப்பாக மன்னார்குடி கிடங்கு தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு-மத்திய அரசிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும்.


வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அதற்கான விபரப் பட்டியலை வருவாய் கிராமங்கள் தோறும் வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதுகுறித்து அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடவில்லை என தெரியவருகிறது. மேலும் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் மத்திய அரசு இடுபொருள் இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் வழங்கி வந்த நிலையில் அதனை தமிழக அரசு ரூ 6030  ஆக குறைத்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் விவசாயிகள் பெற்று வந்த சலுகைகளை,  புதிய ஆட்சி பறிக்கும் நிலை மிகுந்த அச்சம் அளிக்கிறது. விவசாயிகள் திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த நிலையில் தற்போதைய செயல்பாடுகள் பார்த்து மிகுந்த ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் வேளாண்துறை செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழக அரசிற்கும், விவசாயிகளுக்கும் எதிரான நிலை எடுக்கும் சதி நடந்து வருவது போலத் தோன்றுகிறது. இது மிகுந்த அச்சம் அளிக்கிறது. தமிழக முதலமைச்சர் இதனை உணர்ந்து விவசாயிகளுடைய நடைமுறையில் உள்ள உரிமைகளை தொடர்வதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.




பருத்தி கொள்முதல் தமிழக அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்து வருகிறது. தற்போது அதனை  கைவிடுவதாகவும், பருத்திக்கு விலை நிர்ணயம் செய்வதை அந்த பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். பருத்தி பணப்பயிர் மட்டுமல்ல, குறைந்த நீரில் நிறைந்த வருவாய் தரக்கூடிய கோடை கால பயிராகும். எனவே இதனை கொள்முதல் செய்வதிலும், விலை நிர்ணய செய்யும் பட்டியலில் கைவிடுவதால் விவசாயிகளுக்கு நன்மை தருவதாக வந்திருக்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது எந்த வகையிலும் நன்மை தருவதாக அமையாது.


கடந்த ஆண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொள்முதல் செய்யும் வரையிலும் வெளி சந்தையில் ஒரு குவிண்டால் பருத்தி  4,000 விற்று வந்தனர். விவசாயிகள் கடும் போராட்டத்திற்குப் பிறகு கொள்முதலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் தொடங்கியபோது ஒரு குவிண்டால்  7,500 வரை விற்கப்பட்டது. என்பதை உணர்ந்து விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்வது தொட வேண்டும் என்றார். அவருடன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் தஞ்சை பழனியப்பன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் எம் மணி,  மாவட்ட தலைவர் துரை பாஸ்கரன், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள்பலர் பங்கேற்றிருந்தனர்.