எட்டு வழி சாலை தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும் அமைச்சர் எ.வ வேலு திருவாரூரில் பேட்டி.



திருவாரூர் கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு என்ற இடத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ வேலு கூறியதாவது, திருவாரூர் மாவட்டத்தில் 1295 கிலோ மீட்டர் தூரம் சாலைகளை விரிவுபடுத்துவது,மேம்படுத்துவது செப்பனிடுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.கடந்த திமுக ஆட்சிக் காலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஏழு புறவழிச் சாலைகள் அமைக்க பணிகள் திட்டமிடப்பட்டு அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.


ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் புறவழிச் சாலை பணிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. தற்பொழுது முதல்வர் மு.க ஸ்டாலின்  புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் முதல் கட்டமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.


தமிழகத்தில் கிராமப்புற பகுதிகள் அதிகம் உள்ளன.குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கிராமப்புறங்கள் உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு. திருவா௹ர் மாவட்டத்தில் 10,000 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நபார்டு வங்கியின் மூலமாக 59.94 கோடி நிதி பெறப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் 19 பாலங்கள் மற்றும் கிராமப்புற சாலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தற்போது 14 பாலப் பணிகள் முடிவடைந்த நிலையில், எஞ்சியுள்ள 5 பாலப் பணிகளும் இந்த நிதியாண்டிற்குள் முடிக்கப்படும். மத்திய அரசுக்கு மாநில அரசு இணக்கமான முறையில் தான் இருக்கிறது.மத்திய அரசு சொல்லக்கூடிய அனைத்து பணிகளையும் மாநில அரசு சிறப்பாக செய்து வருகிறது.11 ஆண்டு காலமாக கிடப்பில் இருந்த சாலை பணிகளை கடந்த 8 மாதங்களில் நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம் ஆகவே நாங்கள் மத்திய அரசுடன் ஒத்துப்போகும் மனநிலையில் தான் இருக்கிறோம்

எட்டு வழி சாலை பணிகள் தொடங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசுதான் பணிகள் தொடங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும். 


மத்திய அரசு முடிவு எடுத்து தமிழக முதல்வரிடம் தெரிவிப்பார்கள் தமிழக அரசு இதில் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது எட்டு வழி சாலை என்பது சாதாரண சாலை அமைப்பது போன்ற பணி இல்லை. ஆகவே இதில் தமிழக முதல்வர் கொள்கை முடிவு எடுப்பார் என அமைச்சர் எ.வ வேலு தெரிவித்தார்