திருவாரூர் மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொரோரனா தொற்று ஒருவருக்குக் கூட இல்லை.

இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா நான்காம் அலை வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா குறித்த அச்சம் என்பது இன்று வரை தொடர்ந்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா உயரிழப்பு என்பதும் மிகையாக இருந்தது. பல நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்குகளை விதித்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில்  கொரோனா தொற்று வேகம் மிக அதிவேகமாக அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று மாதமாக கொரோனா தொற்று வேகம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக  திருவாரூர் மாவட்டத்தில்  கொரோனா தொற்று பாதித்தவர் ஒருவர் கூட இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் சமீபத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலாக பரவி வந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பரவல் என்பது கட்டுக்குள் வைக்கப்பட்டுருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தற்பொழுது நான்காம் அலை பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது அதேநேரத்தில் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அனைத்து பொது மக்களும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மேலும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து பொதுமக்கள் நடக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 48 ஆயிரத்து 9 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 ஆயிரத்து 534 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 3 நபர்கள் மட்டும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை 472 நபர்கள் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1080 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 1 நபருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி நன்னிலம் குடவாசல் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மேலும் நடமாடும் மருத்துவமனை என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி என்பது முக்கியமான ஒரு ஆயுதமாகும். மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை மாவட்டம் முழுவதும் முதல் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மொத்தம் 9 லட்சத்து 200 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 14 ஆயிரத்தி 174 நபர்களுக்கும்,பூஸ்டர் தடுப்பூசி 5676 நபர்களுக்கும் என ஒட்டுமொத்தமாக 16 லட்சத்து 20 ஆயிரத்து 90 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.